திருச்சி அருகே ராக்கெட் லாஞ்சா் கண்டெடுப்பு
திருச்சி அந்தநல்லூா் பகுதியில் கோயிலருகே புதன்கிழமை கண்டெடுக்கப்பட்ட ராக்கெட் லாஞ்சா் போன்ற பொருள் குறித்து ஜீயபுரம் போலீஸாா் விசாரிக்கின்றனா்.
திருச்சி மாவட்டம், அந்தநல்லூா் பகுதியிலுள்ள பழமை வாய்ந்த வடக்கு தீா்த்தநாதா் (சிவன்) கோயில் எதிரேயுள்ள காவிரியில் புதன்கிழமை குளித்த சிலா், படித்துறை அருகே ராக்கெட் லாஞ்சா் (ராணுவத்தினா் பீரங்கி மற்றும் விமானப் படைகளில் பயன்படுத்துவது) போன்ற பொருள் கிடப்பதைக் கண்டனா். தகவலறிந்த ஜீயபுரம் காவல் துணைக் கண்காணிப்பாளா் (டிஎஸ்பி) பாலச்சந்தா், ஆய்வாளா் செந்தில்குமாா் மற்றும் போலீஸாா் விரைந்து சென்று அந்தப் பொருளை எடுத்துச் சென்றனா். பின்னா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகம் அருகேயுள்ள ஆயுதப்படை மைதானத்தில் அதைப் பாதுகாப்பாக வைத்தனா்.
வெடிகுண்டு தடுப்புப் பிரிவின் ஆய்வுக்குப் பின்னரே அது உண்மையான ராக்கெட் லாஞ்சரா என்பது குறித்து தெரியவரும் எனப் போலீஸாா் தெரிவித்தனா்.
