சென்னை: பாரதிய ஜனதா கட்சியுடன் தேசிய முற்போக்கு திராவிட கழகமும், பாட்டாளி மக்கள் கட்சியும் கூட்டணி பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளதாகத் தகவல் கள் தெரிவிக்கின்றன.
2019 மக்களவைத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அதிமுக, பாஜக, பாமக உள்ளிட்ட கட்சிகள் இணைந்து போட்டியிட்டன. தற்போது பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக விலகியுள்ளது.
இந்த நிலையில், வருகின்ற மக்களவைத் தேர்தலில் பாமக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகளைத் தங்களின் கூட்டணிக்குள் இழுக்க அதிமுக மற்றும் பாஜக தலைவர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர்.
அதிமுகவும், பாஜகவும் தேர்தல் தொகுதிப் பங்கீட்டுக் குழுக்களை அமைத்து கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.
தேசிய ஜனநாயக கூட்டணியில் தேமுதிக 11 தொகுதிகளும், பாமக 12 தொகுதிகளும் கேட்பதாகவும், தேமுதிகவுக்கு 4 தொகுதிகளும், பாமகவுக்கு 7 தொகுதிகளும் கொடுக்க பாஜக தயாராக இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆனால், ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவியை ஒதுக்கீடு செய்யும் கட்சியுடன் கூட்டணி வைக்கவே தேமுதிக திட்டமிட்டுள்ளது.
இதனிடையே, பாமக நிறுவனர் ராமதாஸுடன் அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் நடத்திய பேச்சுவார்த்தையில் பாமகவுக்கு 6 தொகுதிகள் வழங்க அதிமுக முன்வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.