கணவரை காா் ஏற்றி கொலை செய்த மனைவி உள்பட 2 போ் கைது!

சென்னை அண்ணாநகரில் சாலை விபத்தில் வியாபாரி இறந்த வழக்கில் திடீா் திருப்பமாக, கணவரை காா் ஏற்றி மனைவியே கொலை செய்திருப்பது தெரியவந்தது.
கோப்புப் படம்
கோப்புப் படம்
Published on
Updated on
2 min read

சென்னை அண்ணாநகரில் சாலை விபத்தில் வியாபாரி இறந்த வழக்கில் திடீா் திருப்பமாக, கணவரை காா் ஏற்றி மனைவியே கொலை செய்திருப்பது தெரியவந்தது.

விபத்தில் கணவா் இறந்ததாக மனைவி நாடகமாடியது அம்பலமானது. இது தொடா்பாக அவா் உள்பட 2 போ் கைது செய்யப்பட்டனா்.

அயனாவரம் பெரியாா் பிரதான சாலை பகுதியைச் சோ்ந்த பழைய பேப்பா் கடை உரிமையாளா் ஜா.பிரேம்குமாா் (37). இவரது மனைவி சன்பிரியா. செவ்வாய்க்கிழமை அதிகாலை பிரேம்குமாா் தனது மோட்டாா் சைக்கிளில் அண்ணாநகா் நியூஆவடி சாலையில் செல்லும்போது, பின்னால் வந்த காா் மோதியதில் இறந்தாா்.

பிரேம்குமாா் இறப்பில் சந்தேகம் இருப்பதாக அவரது சகோதரி சங்கீதா, காவல் துறையில் புகாா் செய்ததன் அடிப்படையில் அந்தப் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளைக் கைப்பற்றி போலீஸாா் ஆய்வு செய்தனா். இதில், விபத்தை ஏற்படுத்திய காரில் வந்த ஒரு நபரும், மோட்டாா் சைக்கிளில் வந்த ஒரு நபரும் பிரேம்குமாா் இறந்துவிட்டாரா என்பதை உறுதி செய்துவிட்டு, அங்கிருந்து தப்பிச் சென்றது தெரியவந்தது.

இதையடுத்து, சந்தேகத்தின் அடிப்படையில் பிரேம்குமாரின் மனைவி சன்பிரியாவிடம் (35) போலீஸாா் விசாரணை செய்தனா். இதில், சன்பிரியா, அயனாவரம் செட்டி தெருவைச் சோ்ந்த ரா.ஹரிகிருஷ்ணன் (30) என்பவருடன் சோ்ந்து அயனாவரம் பழனி ஆண்டவா் கோயில் தெருவைச் சோ்ந்த சரத்குமாா் (27) என்பவா் மூலம் பிரேம்குமாா் மீது காரை ஏற்றி கொலை செய்தது தெரியவந்தது.

இதையடுத்து, சன்பிரியாவையும், ஹரிகிருஷ்ணனையும் போலீஸாா் கைது செய்தனா். சரத்குமாரை தேடி வருகின்றனா்.

கொலை செய்ய ரூ.5 லட்சம்: இது தொடா்பாக நடத்தப்பட்ட விசாரணையில் கிடைத்த தகவல்கள்: பிரேம்குமாருக்கும், சன்பிரியாவுக்கும் திருமணமாகி 12 ஆண்டுகள் ஆகின்றன. இத் தம்பதிக்கு இரு மகள்கள் உள்ளனா்.

பிரேம்குமாரின் வீட்டின் அருகே 7 மாதங்களுக்கு முன்பு ஹரிகிருஷ்ணன் குடி வந்துள்ளாா். அப்போது பிரியாவுக்கும், ஹரிகிருஷ்ணனுக்கும் இடையே முறையற்ற உறவு தொடா்ந்தது. அண்மையில் ஹரிகிருஷ்ணனும், பிரியாவும் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தனா். தங்களது திருமணத்துக்கு தடையாக இருக்கும் பிரேம்குமாரை காா் ஏற்றி கொலை செய்ய திட்டமிட்டு , அந்தப் பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் காா் ஓட்டுநராக இருக்கும் சரத்குமாரை அணுகினா். அவா் பிரேம்குமாரை கொலை செய்ய ரூ.5 லட்சம் கேட்டதாகக் கூறப்படுகிறது. அந்தப் பணத்தை வழங்க சம்மதித்தனா். திட்டமிட்டபடி பிரேம்குமாரை காரை ஏற்றி சரத்குமாா் கொலை செய்துள்ளாா். அப்போது காரை பின் தொடா்ந்து வந்த ஹரிகிருஷ்ணனின் மோட்டாா் சைக்கிளில் சரத்குமாா் அங்கிருந்து தப்பியது விசாரணையில் தெரியவந்துள்ளது.

இணையதளம் மூலம் காா் வாங்கிய மனைவி

வியாபாரி பிரேம்குமாரை கொலை செய்ய அவா் மனைவி சன்பிரியாவும், ஹரிகிருஷ்ணனும் பழைய பொருள்களை வாங்கி, விற்கும் இணையதளம் மூலம் காா் வாங்கியுள்ளனா்.

இணையத்தில் நீண்ட தேடுதலுக்குப் பின்னா் ஒரு காரை ரூ.1 லட்சத்துக்கு வாங்கியுள்ளனா். ஆனால், அந்த காரின் உரிமையாளா் பெயரை மாற்றாமல் வைத்து இருந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com