தென் மண்டல அளவில் பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மகளிர் கைப்பந்து போட்டிகள் சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, பாண்டிச்சேரி ஆகிய ஆறு மாநிலங்களை சேர்ந்த 50 பல்கலைக்கழக அணிகள் பங்கேற்றன.
லீக் போட்டிகளின் முடிவில் சேலம் பெரியார் பல்கலைக்கழகம் மற்றும் கேரளத்தின் மகாத்மா காந்தி பல்கலைக்கழக அணிகள் இறுதிப் போட்டியில் மோதின. மிகுந்த விறுவிறுப்புடன் நடைபெற்ற போட்டியின் முடிவு 26 - 14 என்ற புள்ளிக் கணக்கில் சேலம் பெரியார் பல்கலைக்கழக அணி வெற்றியடைந்தது.
இதனைத் தொடர்ந்து நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் பத்மவாணி மகளிர் கல்விக் குழுமத் தலைவர் சத்தியமூர்த்தி, முதலிடம் பெற்ற அணிக்கு பரிசுக் கோப்பை வழங்கினார்.
இதையும் படிக்க: பரமத்தி வேலூரில் கடும் பனிப்பொழிவு
இதேபோன்று இரண்டாம் இடம் பிடித்த மகாத்மா காந்தி பல்கலைக்கழக அணி, மூன்றாம் இடம் பிடித்த கோழிக்கோடு பல்கலைக்கழக அணி, நான்காம் இடம் பிடித்த கோவை பாரதியார் பல்கலைக்கழக அணி மாணவிகளுக்கு கோப்பைகள் வழங்கப்பட்டன
இந்நிகழ்ச்சியில் பெரியார் பல்கலைக்கழக உடற்கல்வி இயக்குனர் வெங்கடாஜலம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த நான்கு அணிகளும் அகில இந்திய அளவில் பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மகளிர் கைப்பந்து போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.