சிறந்த மாடுபிடி வீரர், காளைக்கு கார் பரிசு: அமைச்சர் பி. மூர்த்தி வழங்கல்
பாலமேடு ஜல்லிக்கட்டில் 14 காளைகளை அடக்கிய பொதும்பைச் சேர்ந்த பிரபாகரன், களத்தில் சிறப்பாக விளையாடிய புதுக்கோட்டை ராயவயலைச் சேர்ந்த சின்னக்கருப்பு என்ற காளையின் உரிமையாளர் மருதுபாண்டி ஆகியோருக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி சார்பில் கார்களை பரிசாக அமைச்சர் பி. மூர்த்தி வழங்கினார்.
மதுரை, சின்னப்பட்டியைச் சேர்ந்த தமிழரசன் 11 காளைகளை அடக்கி இரண்டாம் பரிசு பெற்றார். அவருக்கு சோழவந்தான் சட்டப்பேரவை உறுப்பினர் வெங்கடேசன் சார்பில் இரு சக்கர வாகனம் பரிசாக வழங்கப்பட்டது. இவர் கடந்தாண்டு பாலமேடு ஜல்லிக்கட்டில் முதலிடம் பெற்று கார் பரிசு பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. களத்தில் சிறப்பாக விளையாடி 2 ஆம் இடம் பிடித்த தேனி மாவட்டம் கோட்டூரைச் சேர்ந்த அமர்நாத் என்பவருக்கு கன்றுடன் நாட்டு பசு வழங்கப்பட்டது.
முதலிடம் பிடித்த பிரபாகரன் செய்தியாளர்களிடம் கூறுகையில், “கடந்தாண்டு பாலமேடு ஜல்லிக்கட்டில் முதலிடம் பெற முயற்சித்தும் கிடைக்கவில்லை. தற்போது வெற்றி கிடைத்துள்ளது. நண்பர்கள் ஊக்கம் அளித்ததால் சிறப்பாக காளைகளை அடக்க முடிந்தது. கார் பரிசு என்பது தற்காலிகமானது, எனவே ஒன்பதாம் வகுப்பு வரை படித்துள்ள எனது வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் அரசுப்பணி வழங்க வேண்டும்.
மாடுபிடி வீரர்கள் இணையதளம் மூலம் விண்ணப்பிப்பதை ரத்து செய்ய வேண்டும். எனக்கு ஞாயிற்றுக்கிழமை இரவு நேரத்தில் ஜல்லிக்கட்டில் பங்கேற்க அனுமதி கிடைத்தது” என்று கூறினார்.
சிறந்த காளைக்கான பரிசு பெற்ற புதுக்கோட்டை மாவட்டம் ராயவயலைச் சேர்ந்த மருதுபாண்டி கூறியதாவது: “ராக்கெட் குழு என்ற பெயரில் நண்பர்களுடன் இணைந்து ஜல்லிக்கட்டு காளைகள் வளர்த்து வருகிறேன். அதில் சின்ன கருப்பு காளை முதலிடம் பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது. எனது பெற்றோர் ஜல்லிக்கட்டு காளைகள் வளர்ப்பதை விரும்புவதில்லை. எனது மனைவி மற்றும் நண்பர்கள் ஆதரவால், சின்ன கருப்பு வெற்றி பெற்றுள்ளது என்றார் அவர்.