2024 இல் எல்லா தேசிய இனங்களின் ஆட்சி அமைக்கப்படும்: ஆ.ராசா பேச்சு

2024 இல் மத்தியில் மத தேசியம் ஒழிக்கப்பட்டு, எல்லா தேசிய இனங்களின் ஆட்சி அமைக்கப்படும் என நீலகிரி மக்களவை உறுப்பினா் ஆ.ராசா  தெரிவித்தார். 
2024 இல் எல்லா தேசிய இனங்களின் ஆட்சி அமைக்கப்படும்: ஆ.ராசா பேச்சு


சேலம்: 2024 இல் மத்தியில் மத தேசியம் ஒழிக்கப்பட்டு, எல்லா தேசிய இனங்களின் ஆட்சி அமைக்கப்படும் என நீலகிரி மக்களவை உறுப்பினா் ஆ.ராசா  தெரிவித்தார். 

மாநில உரிமை மீட்பு முழக்கம் என்ற தலைப்பில் திமுக இளைஞரணி 2 ஆவது மாநில மாநாடு சேலம் பெத்தநாயக்கன்பாளையத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிக்கு கட்சிக் கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

மாநாட்டு வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த 100 அடி உயர கொடிக்கம்பத்தில், தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், மாநில இளைஞரணி செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் முன்னிலையில், துணை பொதுச்செயலாளா் கனிமொழி கட்சி கொடியையேற்றி வைத்தாா். மாநாட்டு அரங்குகளை சட்டப்பேரவை உறுப்பினா் எழிலரசன் திறந்து வைத்தாா். தொடா்ந்து, மாநாட்டு மேடையில் வைக்கப்பட்டிருந்த ஈ.வே.ரா. அண்ணா, கருணாநிதி, பேராசிரியா் அன்பழகன் ஆகியோரது திருவுருவப் படங்களுக்கு திமுக பொதுச்செயலாளா் துரைமுருகன், பொருளாளா் டி.ஆா்.பாலு, மாநாட்டு தலைவா் உதயநிதிஸ்டாலின், ஒருங்கிணைப்பாளா் கே.என்.நேரு, துணை பொதுச்செயலாளா் கனிமொழி ஆகியோா் மலா்தூவி மரியாதை செலுத்தினா். 

மாநாட்டில் நீட் தேர்வு ரத்து முதல் ஆளுநா் பதவியை நிரந்தரமாக அகற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட 25  தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மேலும் பல்வேறு தலைப்புகளில் அமைச்சர்கள் மற்றும் சிறப்பு தலைவர்கள் பேசி வருகிறார்கள்.

நீலகிரி மக்களவை உறுப்பினா் ஆ.ராசா பேசுகையில், நரேந்திர மோடி அவர்களே நீங்கள் பிரதமராக இருக்கலாம். ஆனால் பிறப்பால் நீங்கள் சூத்திரர்கள். ஆர்.எஸ்.எஸ் ஒருபோதும் உங்களை ஒப்புக்கொள்ளாது. 

சங்கராச்சாரியார்கள் உங்களை ஒப்புக்கொள்ள மறுக்கிறார்கள். சங்கராச்சாரியார்கள் இந்து என்றால் நீங்கள் யார்?

நாட்டில் இரண்டு பண்பாடு உள்ளது. ஒன்று ஆரிய பண்பாடு, மற்றொன்று திராவிட பண்பாடு. 

இஸ்லாமிய எதிர்ப்பு, கிறிஸ்துவ எதிர்ப்பு, பகுத்தறிவுவாதிகள் எதிர்ப்பு, மதச்சார்பின்னை எதிர்ப்பு, பொதுவுடமைவாதிகள் எதிர்ப்பு ஆகியவற்றை கொண்டது ஆரிய மாடல். 

சுயமரியாதை, சமத்துவதம், மாநில சுயாட்சி, மதச்சார்பின்மை, தேசிய இனங்களை அங்கீகரிப்பது ஆகிய ஐந்தை உள்ளடக்கியதுதான் திராவிட மாடல்.

மதம் ஒருபோதும் தேசியமாக முடியாது. மொழிதான் தேசியமாக முடியும். 

இந்து தேசியம் என்கிற பெயரில் இல்லாத ஒரு தேசியத்தை திணிக்க முயலுகிறார்கள். எனவே, 2024 ஆம் ஆண்டில் மத்தியில் மத தேசியம் ஒழிக்கப்பட்டு, எல்லா தேசிய இனங்களின் ஆட்சி அமைக்கப்படும் என ஆ.ராசா தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com