சென்னை: நகர்ப்புற வளர்ச்சியை கிராமப்புறங்களின் பின்னடைவாக கருதக்கூடாது என்று மத்திய அரசின் தலைமை பொருளாதார ஆலோசகர் ஆனந்த நாகேஸ்வரன் தெரிவித்தார்.
சென்னை கிண்டியில் உள்ள கிராண்ட் சோழா ஹோட்டலில், தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தின் சார்பில் நடத்தப்படும் கல்விச் சிந்தனை அரங்கு இன்று(ஜன.25) இரண்டாவது நாளாக நடைபெறுகிறது.
இந்த கருத்தரங்கின் இரண்டாம் நாளில் “இந்தியாவின் வளர்ச்சி” என்ற தலைப்பில் மத்திய அரசின் பொருளாதார ஆலோசகர் ஆனந்த நாகேஸ்வரன் பங்கேற்று பேசினார்.
அவர் பேசியதாவது, “உலகளவிலான மொத்த உள்நாட்டு உற்பத்தியில், இந்தியா 10 சதவிகிதம் பங்களிப்பதால் கரோனாவுக்கு பிறகு தொடர்ந்து 4 ஆண்டுகளில் 7 சதவிகிதம் வளர்ச்சி அடையக்கூடும்.
நகர்ப்புறங்களை போன்று கிராமப்புறங்கள் வளர்ச்சி அடைவதில்லை. இதனால், ஒரு பிரிவினர் பின்னடைவை சந்திப்பதாக கூற முடியாது. வளர்ச்சி என்பது ஒவ்வொரு பகுதிகளிலும் வேறுபடும்.
கிராமப்புறங்களின் வளர்ச்சி குறைவாக இருப்பதால், நகரப் பகுதிகளாக மறுவரையறை செய்ய வேண்டும்.
வேலைகள் தொடர்ந்து உருவாக்கப்பட்டு வருகிறது. ஆனால், நிரந்தரத் தன்மை கொண்ட பல வேலைகள் உருவாக்க வேண்டும்.” என்று தெரிவித்தார்.