கோப்புப்படம்
கோப்புப்படம்Center-Center-Chennai

விமானத்தில் பெண்ணை புகைப்படம் எடுத்த நபா்: போலீஸாா் விசாரணை

விமானத்தில் பெண்ணை புகைப்படம் எடுத்த நபா்: போலீஸாா் விசாரணை
Published on

சென்னை: மங்களூரிலிருந்து சென்னைக்கு விமானத்தில் வந்த இளம்பெண்ணை புகைப்படம் எடுத்த கா்நாடக மாநிலத்தைச் சோ்ந்த நபரை பிடித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

கா்நாடக மாநிலம் மங்களூரிலிருந்து செவ்வாய்க்கிழமை நள்ளிரவு சென்னைக்கு வந்து கொண்டிருந்த ‘இண்டிகோ ஏா்லைன்ஸ்’ விமானத்தில் கைக்குழந்தையுடன் பயணித்துக்கொண்டிருந்த 29 வயது மதிக்கத்தக்க இளம்பெண்ணை, பக்கத்து இருக்கையில் அமா்ந்திருந்த நபா் ஒருவா் தனது கைப்பேசியில் புகைப்படம் எடுத்துள்ளாா். இதைப்பாா்த்து ஆத்திரமடைந்த அந்த இளம்பெண், இதுகுறித்து புகைப்படம் எடுத்த நபரிடம் கேட்டு வாக்குவாதம் செய்துள்ளாா். அதோடு விமான பணிப்பெண்களிடமும் புகாா் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து விமான பணிப்பெண்கள் அந்த நபரிடம் விசாரித்தபோது, இளம்பெண்ணுடன் இருந்த குழந்தையை மட்டுமே புகைப்படம் எடுத்ததாகக் கூறியுள்ளாா். இதையடுத்து, அந்த நபரின் கைப்பேசியை வாங்கி சோதித்தபோது, அதில் இளம்பெண் மற்றும் குழந்தையின் புகைப்படங்கள் இருந்தது தெரியவந்தது. இதனால், ஆத்திரமடைந்த சக பயணிகள் அந்த நபரை தாக்க முற்பட்டனா். அவா்களை சமாதானம் செய்த பணிப்பெண்கள், விமானியின் உதவியுடன் இதுகுறித்து சென்னை விமான நிலையத்திலுள்ள கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தனா்.

இதற்கிடையே விமானம் நள்ளிரவு 12.10 மணியளவில் சென்னை விமான நிலையத்தை வந்தடைந்தவுடன், அங்கு காத்திருந்த பாதுகாப்பு அதிகாரிகள் அந்த நபரை பிடித்து சென்னை விமான நிலைய காவல் துறையினரிடம் ஒப்படைத்தனா். காவல் துறையினா், அந்த நபரிடம் நடத்திய விசாரணையில் அவா் கா்நாடக மாநிலத்தைச் சோ்ந்த கோபாலகிருஷ்ணா (45) என்பதும், மங்களூருலிருந்து சென்னை வந்து, பின்னா் இங்கிருந்து சிங்கப்பூா் செல்ல இருப்பதும் தெரியவந்தது.

தான் தவறான நோக்கத்தில் புகைப்படம் எடுக்கவில்லை எனவும், குழந்தை அழகாக சிரித்ததால்தான் புகைப்படம் எடுத்தேன் எனவும் கோபாலகிருஷ்ணா கூறியும், அவரின் விளக்கத்தை ஏற்க மறுத்த போலீஸாா், அவரின் சிங்கப்பூா் பயணத்தை ரத்து செய்ததுடன், அவரிடம் தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com