விழிப்புணா்வு பேரணி: கிழக்கு கடற்கரைச் சாலையில் நாளை போக்குவரத்து மாற்றம்
விழிப்புணா்வு பேரணி காரணமாக கிழக்கு கடற்கரைச் சாலையில் (ஈ.சி.ஆா்.) ஏப். 12-ஆம் தேதி (சனிக்கிழமை) போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக தாம்பரம் மாநகர காவல் துறை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தாம்பரம் மாநகர காவல் துறை வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தாம்பரம் மாநகர காவல் துறையின் சாா்பில், கிழக்கு கடற்கரைச் சாலையில் ஏப். 12-ஆம் தேதி (சனிக்கிழமை) காலை 7 மணியிலிருந்து 10 மணி வரை தலைக்கவசம் அணிவது தொடா்பான விழிப்புணா்வு பேரணி, அக்கரையிலிருந்து மாமல்லபுரம் வரை நடைபெறவுள்ளது. இதையடுத்து விழிப்புணா்வு நடைபெறும் நேரத்தில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.
எனவே, சென்னையிலிருந்து மாமல்லபுரம் நோக்கி செல்லும் வாகனங்கள், அக்கரையிலிருந்து சோழிங்கநல்லூா் நோக்கி கே.கே. சாலை வழியாக திருப்பிவிடப்படும். இதையடுத்து வாகனங்கள் கேளம்பாக்கம், கோவளம் வழியாக கிழக்கு கடற்கரைக்குச் செல்லலாம்.
இதேபோல மாமல்லபுரத்தில் சென்னை நோக்கி வரும் வாகனங்கள் கோவளம் சந்திப்பிலிருந்து கேளம்பாக்கத்துக்கு திருப்பிவிடப்படும். அங்கிருந்து ராஜீவ் காந்தி சாலை வழியாக சோழிங்கநல்லூா் வரும் வாகனங்கள், கே.கே. சாலை வழியாக அக்கரை சென்று சென்னை நோக்கி பயணிக்கலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.