
சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள முகாம் அலுவலகத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் அமைச்சர் பொன்முடி சந்தித்துப் பேசினார்.
கடந்த ஏப். 6 ஆம் தேதி பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்துகொண்டு பேசிய அமைச்சர் பொன்முடி, விலைமாது என்று குறிப்பிட்டு பெண்கள் பற்றி கொச்சையான கருத்துகளைக் கூறியிருந்தார். அவர் பேசிய விடியோ சமூக ஊடகங்களில் வைரலான நிலையில் கடும் கண்டனங்கள் எழுந்தன.
மேலும் திமுக எம்.பி. கனிமொழியும் பொன்முடியின் பேச்சுக்கு கடும் கண்டனம் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் திமுகவின் துணைப் பொதுச் செயலர் பதவியில் இருந்து பொன்முடி விடுவிக்கப்படுவதாக கட்சியின் தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
அவருக்குப் பதிலாக அப்பதவியில் எம்.பி. திருச்சி சிவா நியமிக்கப்பட்டுள்ளார்.
பொன்முடியின் கட்சி பதவி பறிப்பு கட்சியின் மூத்த தலைவர்களிடையே சற்று அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள முகாம் அலுவலகத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் அமைச்சர் பொன்முடி வெள்ளிக்கிழமை சந்தித்துப் பேசினார்.
திமுக துணைப் பொதுச்செயலர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட நிலையில் முதல்வரை அமைச்சர் பொன்முடி சந்தித்திருப்பது குறிப்பிடத்தக்கது.