
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே வெள்ளியங்கால் ஓடையில் திங்கள்கிழமை (ஏப். 14) மாலை குளிக்க சென்ற 3 சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் லால்பேட்டை வெள்ளியங்கால் ஓடையில் ஐந்து பள்ளி மாணவர்கள் திங்கள்கிழமை மாலை குளிக்கச் சென்றுள்ளனர்.
வெள்ளியங்கால் ஓடையில் இருந்த பள்ளத்தில் மூன்று பேர் தவறி விழுந்து உள்ளனர். இதில் தண்ணீரில் விழுந்த மாணவர்களை, மற்ற மாணவர்கள் காப்பாற்ற முயன்றும் முடியவில்லை. உடனடியாக அருகில் இருந்தவர்களை கூச்சலிட்டு அழைத்தனர். அருகில் இருந்த பொதுமக்கள் வெள்ளியங்கால் ஓடையில் தேடியும் கிடைக்காததால், உடனடியாக தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
தகவல் அறிந்த காட்டுமன்னார்கோவில் தீயணைப்பு மீட்புத் துறையினர் சம்பவ இடத்திற்குச் விரைந்து வந்து, 3 மணிநேரம் போராடி 3 மாணவர்களின் உடல்களை மீட்டுள்ளனர்.
இது குறித்து போலீசார் விசாரணையில் மூழ்கி இறந்த மாணவர்கள் காட்டுமன்னார்கோவில் அருகே வடக்கு கொளக்குடியை சேர்ந்தவர்கள் என்று தெரியவந்தது.
இறந்த மாணவர்கள் விபரம்: ஜாகிர் உசேன் நகர் பகுதியை சேர்ந்த மூன்று சிறுவர்கள் முஜிபுல்லா மகன் உபயத்துல்லா (8). இவர் நான்காம் வகுப்பு ஜெ ஹெச் நர்சரி மற்றும் பிரைமரி பள்ளியில் படித்து வந்தார். இரண்டாவது ஜாபர்சாதிக் மகன் முகமது அபில் (10). இவர் ஜெ ஹெச் நர்சரி மற்றும் பிரைமரி பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வந்தார்.
மூன்றாவது சாதிக் பாட்ஷா மகன் ஷேக் அப்துல் ரஹ்மான் (13). வடக்கு கொளக்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி எட்டாம் வகுப்பு படித்து வந்தார்.
மூழ்கிய நிலையில் சுமார் 3 மணி நேரத்திற்கு மேலாக தேடிய சூழலில் சிறுவர்கள் மூன்று பேரும் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிக்க: உடைமைகளுக்கான எடைக் கட்டுப்பாடு: ரயில் பயணிகளுக்கு எச்சரிக்கை