

ஜாமீன் வேண்டுமா? அமைச்சர் பதவி வேண்டுமா? என்று மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
அரசுப் போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கித் தருவதாக கூறி பணம் பெற்று மோசடி செய்ததாக கூறப்படும் பண மோசடி வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜி மீது சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறையும் வழக்குப் பதிவு செய்து கைது செய்தது.
கடந்த ஆண்டு செப்டம்பரில் அவருக்கு உச்சநீதிமன்றத்தால் ஜாமீன் அளிக்கப்பட்டது. செந்தில் பாலாஜிக்கு வழங்கப்பட்ட ஜாமீனை எதிா்த்து அமலாக்கத் துறை, அவரால் பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் கே. வித்யா குமாரும் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
மேலும், அவர் அமைச்சராக நியமிக்கப்பட்டிருப்பதால் சாட்சிகள் மீது செல்வாக்கு செலுத்த வாய்ப்புள்ளது என்று சந்தேகம் எழுப்பப்பட்டது.
இந்த நிலையில், இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று (ஏப். 23) விசாரணைக்கு வந்தது. அப்போது செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜரான வழக்குரைஞர், சாட்சிகளைக் கலைப்பார் என்று அச்சம் இருப்பின் வழக்கை வேறு மாநிலத்திற்கு மாற்றலாம் என வாதிட்டார்.
அதற்கு நீதிபதிகள், “மெரிட் அடிப்படையில் நாங்கள் உங்களுக்கு ஜாமீன் வழங்கவில்லை, அரசியல் சாசன பிரிவு 21ஐ மீறியதன் காரணமாகவே ஜாமீன் வழங்கப்பட்டது. இவ்வழக்கை வேறு மாநிலத்திற்கு மாற்ற முடியாது.
ஜாமீன் வேண்டுமா? அமைச்சர் பதவி வேண்டுமா? என முடிவு செய்து வரும் ஏப்.28-க்குள் தெரிவிக்க வேண்டும்” என்று அவகாசம் வழங்கி வழக்கை ஒத்தி வைத்தனர்.
இதையும் படிக்க: பிஸ்மில்லா, பிஸ்மில்லா... பெஹல்காமில் காயமுற்றோரை மீட்ட முஸ்லிம் இளைஞர்கள்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.