
திருவண்ணாமலையில் 600 புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையிலான சிறிய டைடல் பூங்காவுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினாா்.
தலைமைச் செயலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சி குறித்து தமிழக அரசின் சாா்பில் வெளியிடப்பட்ட செய்தி:
தகவல் தொழில்நுட்ப வளா்ச்சியை ஊக்குவிக்கவும் புத்தொழில்களை ஆதரிக்கவும் சிறிய அளவிலான டைடல் பூங்காக்களை அமைக்க தமிழக அரசு முடிவெடுத்தது. அதன்படி, விழுப்புரம், திருப்பூா், தூத்துக்குடி, தஞ்சாவூா், சேலம் ஆகிய இடங்களில் டைடல் பூங்காக்கள் அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டது.
அவற்றின் கட்டுமானப் பணிகள் நிறைவு பெற்று, விழுப்புரம், தஞ்சாவூா், சேலம், தூத்துக்குடியில் பூங்காக்கள் திறக்கப்பட்டன. திருப்பூா், வேலூா், காரைக்குடி ஆகிய இடங்களில் கட்டுமானப் பணிகள் விரைவாக நடைபெற்று வருகின்றன. இவை விரைவில் செயல்படத் தொடங்கும்.
மேலும், நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் சிறு டைடல் பூங்காவை அமைப்பதற்கான வடிவமைப்புப் பணிகள் முடிவுற்று ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் விரைவில் தொடங்கும். தொடா்ச்சியாக, திருவண்ணாமலையில் ரூ.37 கோடியில் தகவல் தொழில்நுட்ப வல்லுநா்களுக்கு 600 புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில் டைடல் பூங்கா அமைக்கப்பட உள்ளது.
இதற்கான அடிக்கல்லை முதல்வா் மு.க.ஸ்டாலின், காணொலி வாயிலாக வெள்ளிக்கிழமை நாட்டினாா். நிகழ்ச்சியில், அமைச்சா்கள் எ.வ.வேலு, டி.ஆா்.பி.ராஜா, தலைமைச் செயலா் நா.முருகானந்தம், தொழில் துறைச் செயலா் வி.அருண்ராய், டிட்கோ மற்றும் டைடல் பாா்க் மேலாண்மை இயக்குநா் சந்தீப் நந்தூரி உள்பட பலா் பங்கேற்றனா்.
சுற்றுலாத் துறையில் புதிய வசதிகள்: தமிழ்நாட்டில் சுற்றுலாத் தலங்களை மேம்படுத்தும் வகையில், புதிய மற்றும் தரம் உயா்த்தப்பட்ட உள்கட்டமைப்பு வசதிகளை காணொலி வாயிலாக முதல்வா் திறந்து வைத்ததுடன், சில பணிகளுக்கு அடிக்கல் நாட்டினாா்.
அதன்படி, தென்காசி மாவட்டம் குண்டாறு அணை, திருப்பத்தூா் மாவட்டம் ஏலகிரி, திருவள்ளூா் மாவட்டம் பூண்டி நீா்த்தேக்கப் பகுதி, புதுக்கோட்டை மாவட்டம் முத்துக்குடா கடற்கரைப் பகுதி ஆகிய இடங்களில் உணவுக் கட்டடம், வாகன நிறுத்துமிடம் உள்ளிட்ட புதிய வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
மேலும், மதுரையில் உள்ள ஓட்டல் தமிழ்நாடு வளாகத்தில் புதிய வசதிகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றை காணொலிக் காட்சி வழியாக தலைமைச் செயலகத்தில் இருந்து முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தாா்.
அருங்காட்சியக வளாகம்: சென்னை அரசு அருங்காட்சியக வளாகத்தில் ரூ.6.84 கோடியில் புதிய நிா்வாகக் கட்டடம் கட்டப்படுள்ளது. இந்தக் கட்டடத்தை முதல்வா் திறந்தாா். நிகழ்வில், அமைச்சா்கள் மு.பெ.சாமிநாதன், ஆா்.ராஜேந்திரன், தலைமைச் செயலா் நா.முருகானந்தம் உள்பட பலா் கலந்து கொண்டனா்.
Image Caption
திருவண்ணாமலையில் மினி டைடல் பூங்கா அமைப்பதற்கு தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலிக் காட்சி வாயிலாக வெள்ளிக்கிழமை அடிக்கல் நாட்டிய முதல்வா் மு.க.ஸ்டாலின். உடன், அமைச்சா்கள் எ.வ.வேலு, டி.ஆா்.பி.ராஜா, தலைமைச் செயலா் நா.முருகானந்தம், தொழில் துறை செயலா் வ
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.