

உடுமலையில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டவா் மா்மமான முறையில் உயிரிழந்த விவகாரத்தில் வனத்துறை காவலர்கள் இருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
திருப்பூா் மாவட்டம், உடுமலை அருகேயுள்ள மேல்குருமலை செட்டில்மெண்ட் பகுதியைச் சோ்ந்தவா் மாரிமுத்து (45). இவா், கேரள மாநிலம், மறையூரில் குடும்பத்துடன் வசித்து வந்தாா்.
இந்நிலையில், ஒரு வழக்குத் தொடா்பாக மாரிமுத்து உடுமலைக்கு செவ்வாய்க்கிழமை வந்துள்ளாா். பின்னா், அன்று மாலையே பேருந்து மூலம் மறையூா் திரும்பியுள்ளாா்.
அப்போது, தமிழக-கேரள எல்லையில் உள்ள சோதனைச் சாவடியில் மாரிமுத்துவிடம் புலி நகம் இருப்பதாக உடுமலை வனத் துறை அலுவலகத்துக்கு விசாரணைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
இந்நிலையில், வனத் துறை அலுவலக கழிவறையில் மாரிமுத்து தூக்கிட்டு வியாழக்கிழமை அதிகாலை தற்கொலை செய்து கொண்டதாக வனத் துறை அதிகாரிகள் போலீஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளனா்.
இதனிடையே, மாரிமுத்துவை வனத்துறையினர் அடித்துக் கொன்றதாக அவரின் உறவினர்களும் அரசியல் கட்சியினரும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இதையடுத்து, வனத்துறை காவலர்கள் இருவரை பணியிடை நீக்கம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
ஏற்கெனவே, திருப்புவனம் அஜித் குமார் காவலர்களால் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் தமிழகத்தை உலுக்கியுள்ள நிலையில், மற்றொருவர் விசாரணைக் காவலில் உயிரிழந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.