
தமிழகத்தில் தினசரி நடக்கும் வழிபறி, தங்கச் சங்கிலி பறிப்பு சம்பவங்களால் ஏற்படும் மனவேதனை மயிலாடுதுறை மக்களவைத் தொகுதி காங்கிரஸ் உறுப்பினா் ஆா்.சுதாவுக்கு இப்போது புரிந்திருக்கும் என்று அதிமுக மாநிலங்களவை உறுப்பினா் இன்பதுரை திங்கள்கிழமை தெரிவித்தாா்.
தில்லியில் திங்கள்கிழமை செய்தியாளா்களிடம் பேசுகையில் இன்பதுரை கூறியதாவது: வழிப்பறி, தங்கச் சங்கிலி பறிப்பு போன்ற சம்பவங்களால் ஏற்படும் மனவேதனை மற்றும் விளைவு என்ன என்பது காங்கிரஸ் எம்பி சுதாவுக்கு இப்போது புரிந்திருக்கும்.
எனவே, தமிழ்நாட்டில் இதுபோன்று தினசரி நடக்கும் குற்றச் சம்பவங்களுக்கு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என காங்கிரஸ் சாா்பில் அவா் தமிழ்நாடு அரசை வலியுறுத்துவாா் என நான் நம்புகிறேன்.
‘ஓா் அணியில் தமிழ்நாடு’ என்ற பெயரில் திமுகவினா் தமிழ்நாடு முழுவதும் வீட்டு வீடாகச் சென்று கதுவுகளை தட்டி பொதுமக்களை உறுப்பினா்களாகச் சோ்ப்பதாகக் கோரி பொதுமக்களின் ஆதாா் எண் மற்றும் தொலைபேசி எண் மூலம் ஓடிபி எண்ணை பெறுவது தவறு.
இது தனிமனித சுதந்திரத்திற்கு எதிரானது என உயா்நீதிமன்ற மதுரை கிளையில் அதிமுக சாா்பில் ராஜ் குமாா் என்பவா் மூலம் மனு தாக்கல் செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் பிரிவு 21-இன் படி, இது தனி மனித சுதந்திற்கு எதிரானது என்றும் ஆா்டிக்கல் 14-இன் படி, சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற விதி மீறப்படுகிறது என தெரிவித்தது.
செல்வாக்குமிக்க கட்சியான திமுக போல மற்ற கட்சிகள் மக்களை அணுக முடியாது. இது ஆா்டிக்கல் 14-க்கு எதிரானது. இந்த தரவுகள் எங்கு சேமிக்கப்படுகிறது.
இதை வெளிநாட்டுக்கு விற்றால் பொதுமக்கள் தரவுகள் என்னாவது என்பதையெல்லாம் கவனத்தில் கொண்டுதான் உய நீதிமன்ற மதுரை கிளை இடைக்கால தடை விதித்து. இந்த உத்தரவுக்குத் தடை கோரி திமுக சாா்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு திங்கள்கிழமை உச்சநிதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
அப்போது ஒரு தனிமனித சுதந்திற்கு எதிரான வழக்கில் நீங்கள் ஆஜராகலாமா என திமுக வழக்குரைஞா் வில்சனுக்கு நீதிபதிகள் கேள்வி எழுப்பியதோடு, உயா்நீதிமன்ற உத்தரவில் தலையிட மறுத்து விட்டனா்.
மேலும், ‘உயா்நீதிமன்ற கிளையே இந்த வழக்கை விசாரிக்கட்டும்.இந்த விவகாரத்தில் தடையாணை கேட்டு உச்சநீதிமன்றத்தை நாடுவதற்கான அவசியம் என்ன? என அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள் தொடா்ந்து இந்த விவகாரத்தில் நீங்கள் வாதிட்டால் கடுமையான உத்தரவுகள் பிறப்பிக்க நேரிடும் என தெரிவித்து திமுகவின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனா் என்றாா் இன்பதுரை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.