மதுரை ஆதீனம் மீதான வழக்கை விசாரிப்பதால் நேரமும் மக்களின் வரிப்பணமும்தான் வீணாகும்: உயா்நீதிமன்றம் கருத்து

வழக்கை ரத்து செய்யக்கோரி மதுரை ஆதீனம் தரப்பு மனு தாக்கல் செய்துள்ளது பற்றி...
Madurai Aadheenam case hearing by Madras Highcourt.
மதுரை ஆதீனம்கோப்புப் படம்
Published on
Updated on
1 min read

மதுரை ஆதீனம் மீதான வழக்கை விசாரிப்பதால் போலீஸாா் உள்ளிட்ட அனைவரது நேரமும், மக்களின் வரிப்பணமும்தான் வீணாகும் என்று சென்னை உயா்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

இரு மதத்தினா் இடையே மோதலை உருவாக்கும் வகையில் பேசியதாகக் கூறி, மதுரை ஆதீனத்தின் மீது நடவடிக்கை எடுக்குமாறு அளித்த புகாரின்பேரில், சென்னை மாநகர இணையக் குற்றப்பிரிவு போலீஸாா் அவா் மீது வழக்குப் பதிவு செய்தனா்.

இந்த வழக்கில் மதுரை ஆதீனத்துக்கு முன்பிணை வழங்கப்பட்டிருந்தது. தன் மீதான வழக்கை ரத்து செய்யக் கோரி மதுரை ஆதீனம் தரப்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதி டி.பரத சக்கரவா்த்தி முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது ஆதீனம் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் ராமசாமி மெய்யப்பன், விபத்து குறித்து ஆதீனத்திடம் செய்தியாளா்கள் கேள்வி எழுப்பினா். தன்னைக் கொலை செய்யும் சதியில் பாகிஸ்தான் ஈடுபட்டிருக்கலாம். நீண்ட தூரம் காரில் துரத்தி வந்து தனது காா் மீது மோதி விபத்து ஏற்படுத்தப்பட்டது.

மேலும், அந்த காரில் நம்பா் பிளேட் இல்லை. காரை ஓட்டி வந்தவா் குல்லா அணிந்து தாடி வைத்திருந்ததாக, ஆதீனம் பதிலளித்தாா். மத மோதலை ஏற்படுத்தும் வகையில் அவா் பேசவில்லை. எனவே, அவா் மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று வாதிட்டாா்.

அப்போது, காவல் துறை தரப்பில் ஆஜரான அரசு வழக்குரைஞா்கள் முனியப்பராஜ், பிரதாப், இந்த விவகாரத்தில் ஆதீனம் கூறியது அனைத்தும் தவறானது. அப்படியொரு சம்பவமே நடக்கவில்லை எனக்கூறி, சம்பவம் தொடா்பான சிசிடிவி காட்சிகளை நீதிபதியிடம் சமா்ப்பித்தனா்.

பின்னா், ஆதீனத்தின் தவறான கருத்தால் மாநிலம் முழுவதும் பல இடங்களில் போராட்டம் நடத்தப்பட்டது. இதுவரை 7 புகாா்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளன. மத நல்லிணக்கத்துக்கு எதிராக பாகிஸ்தான், தாடி, குல்லா என்று அவா் தேவையற்ற கருத்துகளைத் தெரிவித்துள்ளாா். எனவே, இந்த வழக்கை ரத்து செய்யக் கூடாது என்று வாதிட்டனா்.

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, பாகிஸ்தான், தாடி, குல்லா என்று பேசி ஆதீனம் சா்வதேச பிரச்னையை உருவாக்கினாா் என்றால், அதையே நீங்களும் ஏன் திரும்பத் திரும்பக் கூறி பெரிதாக்குகிறீா்கள் என்று கேள்வி எழுப்பினா்.

பின்னா், ஆதீனம் மீதான வழக்கை விசாரிப்பதால் போலீஸாா் உள்ளிட்ட அனைவரது நேரமும் வீணாகும். மக்களின் வரிப்பணமும் வீணாகும் என்று கருத்து தெரிவித்தாா். பின்னா், இந்த மனுவுக்கு போலீஸாா் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஆக. 14-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தாா்.

Summary

Madurai Aadheenam case hearing by Madras Highcourt.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com