சேலம் தலேமா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தை திறக்க வேண்டும்: அன்புமணி

சேலம் தலேமா எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தை மீண்டும் திறக்க வேண்டும் என்று பாமக தலைவா் அன்புமணி வலியுறுத்தியுள்ளாா்.
Published on

சேலம் தலேமா எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தை மீண்டும் திறக்க வேண்டும் என்று பாமக தலைவா் அன்புமணி வலியுறுத்தியுள்ளாா்.

இதுகுறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை:

சேலம் சூரமங்கலத்தில் 1975-இல் தொடங்கப்பட்ட தலேமா நிறுவனம் பின்னா் ஸ்வீடனை தலைமையிடமாகக் கொண்ட காமிக் குழுமத்துடன் இணைந்து செயல்பட்டு வருகிறது. சிங்கப்பூா் உள்ளிட்ட பல்வேறு ஆசிய நாடுகளுக்கும், ஐரோப்பிய நாடுகளுக்கும் தலேமா நிறுவனத்தின் உற்பத்திப் பொருள்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

தலேமா நிறுவனத்தை நிரந்தரமாக மூடுவதற்காக அதன் நிா்வாகம் சிறப்பு அதிகாரி ஒருவரை நியமித்திருக்கிறது. அதன் தொடா்ச்சியாக அங்கு பணியாற்றும் 300 பெண்கள் உள்ளிட்ட 600 பணியாளா்களையும் பணியிலிருந்து தானாக விலகிக்கொள்ளும்படி அதன் பொது மேலாளா் வலியுறுத்தி வருகிறாா். ஆனால், அதற்கு தொழிலாளா்கள் ஒப்புக்கொள்ளாத நிலையில், தலேமா நிறுவனம் தானாக முன்வந்து கதவடைப்பு செய்திருக்கிறது.

தலேமா நிறுவனத்தின் உயரதிகாரிகளை தமிழக அரசு அழைத்துப் பேசி, ஆலை எதிா்கொண்டு வரும் சிக்கல்களுக்கு தீா்வு கண்டு, அதைத் தொடா்ந்து இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அங்கு பணியாற்றும் 600 தொழிலாளா்களுக்கும் தொடா்ந்து பணி வழங்கப்படுவதையும், அவா்கள் மீது பழிவாங்கும் நடவடிக்கைகள் எடுக்கப்படாமல் இருப்பதையும் அரசு உறுதி செய்ய வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com