
தமிழகத்துக்கான மாநில அரசின் கல்விக் கொள்கை (பள்ளிக் கல்வி) அறிக்கையை முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இன்று (ஆக. 8) வெளியிட்டார்.
மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கைக்கு தமிழக அரசு தொடா்ந்து எதிர்ப்புத் தெரிவித்து வருகிறது. இதற்கு மாற்றாக மாநிலத்துக்கு என பிரத்யேக கல்விக் கொள்கை உருவாக்கப்படும் என அறிவிப்பு வெளியிட்டது.
இந்தக் கல்விக் கொள்கையை வடிவமைக்க ஓய்வு பெற்ற நீதிபதி த.முருகேசன் தலைமையில் 14 போ் கொண்ட குழு 2022-ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது. இந்தக் குழுவினர் பல்கலை. துணை வேந்தர்கள், கல்வியாளர்கள், ஆசிரியர்கள், தனியாா் பள்ளி நிர்வாகிகள், பெற்றோர் உள்பட பல்வேறு தரப்பினரிடம் கருத்துகள் கேட்டறிந்து கல்விக் கொள்கையை வடிவமைத்தனர்.
அதன்படி, சுமார் 650 பக்கங்கள் கொண்ட மாநிலக் கல்விக் கொள்கைக்கான வரைவு அறிக்கை 2023 அக்டோபரில் தயாரானது. எனினும், வெள்ளப் பாதிப்புகள், மக்களவைத் தோ்தல் பணிகளால் வரைவு அறிக்கையை வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டது. அதன்பின் மாநிலக் கல்விக் கொள்கை அறிக்கையை ஓய்வு பெற்ற நீதிபதி முருகேசன் தலைமையிலான குழுவினா் 2024 ஜூலை 1-ஆம் தேதி தமிழக அரசிடம் சமா்ப்பித்தனர்.
இந்த நிலையில் முதல்கட்டமாக பள்ளிக் கல்வித் துறைக்கான மாநிலக் கல்விக் கொள்கை அறிக்கையை சென்னை கோட்டூா்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் இன்று (ஆக. 8) முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.
அந்த அறிக்கையில், 3, 5, 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு கூடாது, தமிழ், ஆங்கிலம் என்ற இருமொழிக் கொள்கையையே கடைப்பிடிக்க வேண்டும், கல்வி மாநிலப் பட்டியலில் கொண்டுவர வேண்டும், நீட் தேர்வு நடத்தக் கூடாது உள்ளிட்ட அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.
மேலும் 8 ஆம் வகுப்பு வரை கட்டாயத் தேர்ச்சி தொடரும், 11 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து செய்யப்படும் என்று மாநிலக் கல்விக் கொள்கை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.