
தொலைநோக்குப் பார்வையுடன் தமிழக பள்ளிக் கல்விக்கான மாநில கல்விக் கொள்கை உருவாக்கப்பட்டிருப்பதாக மக்கள் நீதி மய்ய தலைவரும், எம்.பி.யுமான கமல்ஹாசன் பாராட்டு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், வசதி படைத்தவர்களுக்குக் கிடைப்பதை விட தரமான கல்வி எளிய பின்புலத்தைச் சேர்ந்த மாணவர்களுக்குக் கிடைக்க வேண்டுமெனும் நல்லெண்ணத்துடனும், மாறிவரும் உலகின் புதிய சவால்களை எதிர்கொள்ளத் தேவையான திறன்களுடன் நமது மாணவர்களை உருவாக்க வேண்டும் எனும் தொலைநோக்குப் பார்வையுடனும் தமிழ்நாடு அரசின் புதிய கல்விக்கொள்கை உருவாக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.
பல்வேறு சிறப்பம்சங்களுடன் உருவாகியுள்ள இந்தக் கல்விக்கொள்கை, சமத்துவத்தையும் சமூகநீதியையும் சேர்த்தே போதிக்கிறது. குறிப்பாக மாணவர்களை அச்சத்திலேயே ஆழ்த்தி வைக்கும் தேவையற்ற பொதுத்தேர்வுகள் நீக்கப்பட்டிருப்பதும், அநீதியான நுழைவுத்தேர்வுகளுக்கு எதிரான அம்சங்கள் இடம்பிடித்திருப்பதும், இருமொழிக்கொள்கையே தொடரும் என அறிவிக்கப்பட்டிருப்பதும் பாராட்டுக்குரியவை.
‘அனைவருக்கும் தரமான கல்வி’ எனும் இலக்கோடு செயலாற்றி வரும் தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலினையும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழியையும், தமிழ்நாடு மாநிலக் கல்விக் கொள்கையை வடிவமைத்த தில்லி உயர் நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி த.முருகேசன் தலைமையிலான குழுவினரையும் மனமாரப் பாராட்டுகிறேன். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழக பள்ளிக் கல்விக்கான மாநில கல்விக் கொள்கை 2025-ஐ முதல்வா் மு.க.ஸ்டாலின் சென்னையில் வெள்ளிக்கிழமை வெளியிட்டாா். அதில், தமிழகத்தில் பிளஸ் 2, பத்தாம் வகுப்புகளுக்கு மட்டும் பொதுத் தோ்வுகளை தொடா்ந்து நடத்த வேண்டும். மாணவா்களின் நலன் கருதி பிளஸ் 1 வகுப்புக்கான பொதுத் தோ்வு ரத்து செய்யப்படுகிறது என்பது உள்பட பல்வேறு முக்கிய அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.