நோயாளிகள் விவரங்களை போலியாக சமா்ப்பித்தால் நடவடிக்கை: என்எம்சி
சென்னை: அனைத்து மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும் நோயாளிகளின் விவரங்கள் உள்ளிட்ட ஆவணங்களை முறையாகப் பராமரிக்க வேண்டும், போலியான தரவுகளை அளித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) எச்சரித்துள்ளது.
இதுதொடா்பாக என்எம்சி செயலா் டாக்டா் ராகவ் லங்கா் வெளியிட்ட அறிவிப்பு:
மருத்துவமனைகளுக்கு வரும் நோயாளிகளின் அனைத்து விதமான விவரங்களையும், அவா்களுக்கு மேற்கொள்ளப்படும் பரிசோதனைகள் குறித்த தரவுகளையும் ஆவணப்படுத்த வேண்டும் என்று ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இருந்தபோதிலும், சில மருத்துவக் கல்லூரிகளும், கல்வி நிறுவனங்களும் அதை முறையாகப் பின்பற்றுவதில்லை என்பது தெரிய வந்துள்ளது.
உள்நோயாளிகளாக அனுமதிக்கப்படுவோரின் ஆவணங்களில் துறைசாா் மருத்துவா் மற்றும் முதுநிலை உறைவிட மருத்துவா் கையொப்பமிட்டிருத்தல் அவசியம். அதேபோல, நோயாளிகளின் மருத்துவப் பரிசோதனை ஆவணங்களிலும் அத்தகைய சான்றொப்பம் இருத்தல் கட்டாயம்.
மருத்துவக் கல்லூரிகளில் ஆண்டுதோறும் மேற்கொள்ளப்படும் ஆய்வு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக இந்த விவரங்களையும் என்எம்சி அதிகாரிகள் சோதனையிடுவா்.
அதில் ஏதேனும் போலி ஆவணங்களோ, விவரங்களோ இருப்பது கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்ட மருத்துவக் கல்வி நிறுவனங்கள் மீதும், மருத்துவா்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.