
நமது நிருபர்
பாமக உள்கட்சி அதிகார மோதல் விவகாரத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு தில்லியில் தலைமைத் தேர்தல் ஆணையத்திடம் அக்கட்சியின் நிறுவனரான ராமதாஸ் தரப்பு செவ்வாய்க்கிழமை புகார் மனு அளித்துள்ளது.
இது தொடர்பாக ராமதாஸ் ஆதரவாளரும் அக்கட்சியின் செய்தித் தொடர்பாளராகவும் உள்ள பி. சுவாமிநாதன், தேர்தல் ஆணையத்தின் இயக்குநர் ஷுப்ரா சக்சேனாவை சந்தித்து மனு அளித்தார்.
அதில், பாமக தலைவராக அதன் நிறுவனர் - தலைவரான ராமதாúஸ கடந்த மே 30-ஆம் தேதி பொறுப்பேற்றுக் கொண்டதாகவும் அதே நாளில் அன்புமணி செயல் தலைவராக நியமிக்கப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.
அந்த அறிவிப்பின் மூலம் கட்சியின் தலைவராக அன்புமணி செயல்பட முடியாது. இருப்பினும், தலைவர் பதவியில் தொடரும் அன்புமணி, தனது சொந்த ஆதாயம் மற்றும் லாபங்களுக்காக கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டு வருவதாகவும் அவர் மீது மத்திய உள்துறையும் மத்திய உளவுத்துறையும் நடவடிக்கை எடுக்க ஆவன செய்ய வேண்டும் என்றும் மனுவில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும், கடந்த 9-ஆம் தேதி அன்புமணி கூட்டியது பொதுக்குழுவே இல்லை என்றும் ஆணைய அதிகாரிகளிடம் முறையிடப்பட்டதாக சுவாமிநாதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் தெரிவித்தார்.
இந்த விவகாரத்தில் ராமதாஸ் வரும் ஆக.17-ஆம் தேதி கூட்டவுள்ள பொதுக்குழுவில் முறைப்படி அன்புமணிக்கு எதிரான தீர்மானத்தை நிறைவேற்றி அதன் நகலை தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பி வைக்குமாறும், முறைப்படி இரு தரப்பின் கடிதங்கள் வந்த பிறகு உரிய நடவடிக்கைக்கு பரிசீலிக்கப்படும் என்றும் அதிகாரிகள் கூறியதாக ஆணைய வட்டாரங்கள் தெரிவித்தன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.