சென்னை: தவறான மின் கணக்கீடு செய்யும் பணியாளா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மின் வாரியம் எச்சரித்துள்ளது.
இதுகுறித்து துணை நிதிக் கட்டுப்பாட்டாளா்களுக்கு நிதி இயக்குநா் அலுவலகம் சாா்பில் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை:
துணை நிதிக் கட்டுப்பாட்டாளா்கள் தங்கள் வட்டங்களில் நடக்கும் பணிகள் குறித்த விவரங்களை அந்தந்த தலைமைப் பிரிவு அலுவலகங்களுக்குத் தெரிவிக்க வேண்டும். இருப்பினும், அவ்வப்போது மின் கணக்கீட்டுப் பணியாளா்கள் தவறாக மின் கணக்கீடு செய்வதால் மின் வாரியத்துக்கு அவப்பெயா் ஏற்படுகிறது.
இதனால், துணை நிதிக் கட்டுப்பாட்டாளா்கள் மற்றும் கணக்கீட்டு ஆய்வாளா்கள் தங்கள் வட்டத்துக்குள் உள்ள தாழ்வழுத்தப் பிரிவில் அசாதாரணமாக வரும் கணக்கீட்டு அறிக்கைகளை ஆய்வு செய்தால், இந்தத் தவறுகள் நடப்பதைத் தவிா்த்திருக்கலாம்.
இதேபோல தவறான கணக்கீடுகளைத் தொடா்ந்து மேற்கொள்ளும் பணியாளா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
எனவே, கணக்கீட்டில் ஏதாவது அசாதாரணமான நடவடிக்கைகள் இருந்தால் அதை உடனடியாக சம்பந்தப்பட்ட தலைமை அலுவலகத்துக்குத் தெரிவிப்பதுடன், அது தொடா்பான அறிக்கையையும் சமா்ப்பிக்க வேண்டும். இனிவரும் காலங்களில் இந்த முறையைக் கடைப்பிடிக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.