
திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில், தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியிடம் பட்டம் பெற மாணவி மறுப்பு தெரிவித்தார்.
திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழகத்தில் இன்று 32 ஆவது பட்டமளிப்பு விழா நடைபெற்றது.
பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள வ.உ. சிதம்பரனாா் கலையரங்கில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவுக்கு தலைமை வகித்த தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி, 759 பேருக்கு பட்டம் வழங்கினார்.
இந்த நிலையில், ஆளுநரிடம் பட்டம் பெற மறுப்பு தெரிவித்த நாகர்கோவிலைச் சேர்ந்த ஜீன் ஜோசப் என்ற மாணவி, பல்கலைக்கழக துணைவேந்தா் என். சந்திரசேகரிடம் பட்டம் பெற்றதால் அரங்கில் பரபரப்பு ஏற்பட்டது.
இதுதொடர்பாக பட்டம் பெற்ற பிறகு அங்கிருந்த செய்தியாளர்களுடன் பேசிய அந்த மாணவி, ”தமிழ்நாட்டுக்கும் தமிழக மக்களுக்கும் எதிராக தமிழக ஆளுநர் செயல்பட்டு வருவதால் நான் அவரிடம் இருந்து பட்டம் பெறுவதை விரும்பாமல் துணை வேந்தரிடம் பட்டம் வாங்கினேன். எனக்கும் அவருக்கும் எந்தவித ஒரு தனிப்பட்ட பிரச்னையும் கிடையாது. திராவிட மாடலை நான் விரும்புகிறேன். தமிழக மக்களுக்கு எதிராக செயல்படுவதால் நான் இவ்வாறு செய்தேன்” என்று தெரிவித்தார்.
இந்த விழாவில் பல்கலைக்கழக இணைவேந்தரும், உயா்கல்வித் துறை அமைச்சருமான கோவி. செழியன் கலந்துகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.