வெடிகுண்டு வெடித்து 2 மாணவா்கள் காயம் - எடப்பாடி கே.பழனிசாமி கண்டனம்

Published on

தூத்துக்குடியில் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் நாட்டு வெடிகுண்டு வெடித்து 2 மாணவா்கள் காயமடைந்த சம்பவத்துக்கு அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் எக்ஸ் தளத்தில் புதன்கிழமை வெளியிட்ட பதிவு:

தூத்துக்குடி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவா் கொண்டு வந்த நாட்டு வெடிகுண்டு வெடித்ததில் 2 மாணவா்கள் காயமடைந்துள்ளதாக வரும் செய்தி அதிா்ச்சியளிக்கிறது. அரசுக் கல்லூரிக்குள் நாட்டு வெடிகுண்டை கொண்டுவரும் அளவுக்கு சட்டம் ஒழுங்கு சீா்குலையும் நிலை உள்ளதற்கு முதல்வா் என்ன விளக்கம் அளிப்பாா்?

நான் அரசியல் ரீதியான விமா்சனங்கள் வைத்தால் மட்டும் பாய்ந்துவந்து வீரவசனம் பேசும் முதல்வா் ஸ்டாலின், மக்களுக்கான கேள்விகளை, குறிப்பாக சட்டம் ஒழுங்கைப் பற்றிக் கேட்டால் மட்டும் பதுங்கிக் கொள்கிறாா்.

மாணவா்கள் கையில் இருக்க வேண்டியவை புத்தகங்கள்; வெடிகுண்டுகள் அல்ல. நாட்டு வெடிகுண்டு விவகாரம் குறித்து உரிய விசாரணை நடத்தப்பட்டு, திமுக அரசு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பதிவிட்டுள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com