
ஆளுநர் ஆர்.என்.ரவியின் தேநீர் விருந்தை திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் புறக்கணித்த நிலையில், தமிழக அரசின் மீது குற்றஞ்சாட்டிப் பேசியுள்ளார்.
சுதந்திர நாளையொட்டி, தேநீர் விருந்தில் கலந்துகொள்ள அரசியல் கட்சிகளுக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அழைப்பு விடுத்தார்.
இருப்பினும், ஆளுநர் ரவியின் தேநீர் விருந்து அழைப்பை முதல்வர் ஸ்டாலின் புறக்கணிக்கும் நிலையில், திமுக அரசின் கூட்டணிக் கட்சிகள் புறக்கணிப்பதாக அறிவித்தன.
இந்த நிலையில், தமிழக அரசின் மீது ஆளுநர் ரவி சில குற்றச்சாட்டுகளையும் முன்வைத்துள்ளார்.
ஆளுநர் ரவி கூறுகையில்,
தமிழகத்தில் பாலியல் குற்றங்கள் அதிகரிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. பெண்கள், பெண் குழந்தைகளின் மீதான பாலியல் குற்றங்கள் தொடர்ந்து அதிகரிப்பது கவலையளிக்கிறது. பாலியல் வன்கொடுமைகளை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்.
தமிழகத்தில் அதிகாரத்தில் உள்ளவர்களின் ஆசியுடன்தான் போதைப்பொருள் விநியோகம் நடைபெறுகிறது. கஞ்சா உள்பட ரசாயன போதைப்பொருள்களின் பயன்பாடும் அதிகரித்தவாறு உள்ளது.
அரசுப் பள்ளிகளில் கல்விச் சூழல் தொடர்ந்து சரிந்து வருகிறது. மாணவர்கள், வேலைவாய்ப்பின்றி வெறும் படிப்புச் சான்றிதழ் பெற்றவர்களாக மட்டுமே வெளியேறுகிறார்கள். நமது இளைஞர்களைக் கொன்று, மாநில எதிர்காலத்தில் பாதிப்பு ஏற்படுத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
வறியநிலை மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் எதிர்காலம் சமரசம் செய்யப்பட்டுள்ளது. சமூக, பொருளாதார ரீதியாக ஒடுக்கப்பட்டோருக்கும் பிறருக்கும் இடையேயான கற்றல் இடைவெளி அதிகரித்துள்ளது. சமூக பொருளாதார பாகுபாட்டுடன் வாழ்வதே அவர்களின் தலைவிதி என்ற நிலையாகிவிட்டது.
பொதுப்பாதையைப் பயன்படுத்தும் பட்டியலின மக்கள் உடல்ரீதியாகத் தாக்கப்படுகின்றனர். சுதந்திரம் பெற்று, 78 ஆண்டுகளான பிறகும், பாகுபாடு நிலவுகிறது என்பது நாம் அவமானப்படக் கூடியது.
தமிழ் மொழியும் கலாசார மரபும் தேசத்தின் பெருமை. தமிழ் மொழி, தமிழ் மரபு, தமிழ்க் கலாசாரத்தின் மிகப்பெரும் அபிமானி நமது பிரதமர் மோடிதான் என்று தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.