
அதிமுக ஆட்சியில் அறிவித்த திட்டங்களை காப்பி - பேஸ்ட் செய்து புதுப்பெயர் சூட்டுகிறார் தமிழக முதல்வர் என்று, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், பல கோடி செலவில் வெற்று விளம்பரம் செய்வதைத்தான் ஃபெயிலியர் மாடல் அரசு என்கிறோம். சொந்தமாக சிந்தித்து மக்கள் தேவை உணர்ந்து திட்டமிடுவோரே தேவை.
என்ன விளம்பரம் செய்தாலும் 2026-ல் ஃபெயிலியர் மாடல் அரசை மக்கள் வீட்டுக்கு அனுப்புவார்கள். ஆட்சி முடியும் தருவாயில் விளம்பரத்துக்காக தொடங்கப்பட்டதுதான் தாயுமானவர் திட்டம். சொல்வது ஒன்று செய்வது ஒன்று. இதுதான் ஸ்டாலினின் திராவிட மாடல் ஆட்சி. அதிமுகவின் நகரும் ரேஷன் கடை திட்டத்தில் தெளிவிருந்தது. மலைக் கிராமங்கள், தொலைதூர கிராமங்களில் பகுதி நேர நியாய விலைக் கடைகள் மற்றும் குறைந்த அளவு குடும்ப அட்டைகள் உள்ள குடியிருப்புகள் என்று தமிழகம் முழுவதும் 37 மாவட்டங்களில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டது.
ஆனால், எங்கள் ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட பல திட்டங்களுக்கு காப்பி - பேஸ்ட் செய்து, தனது பெயரை அல்லது புதுப்பெயரை சூட்டி அரசுப் பணத்தில் பல கோடி ரூபாய் செலவில் வெற்று விளம்பரங்கள் மேற்கொள்வதைத்தான் இந்த அரசு செய்கிறது. ஆனால், மூன்று நாள்களுக்கு முன்பு, ஆரம்பிக்கப்பட்ட உங்களது திட்டத்தில் ஏதேனும் தெளிவிருக்கிறதா? ரேஷன் பொருள்களை எப்படிக் கொண்டு செல்வீர்கள்? என்பது உள்ளிட்ட பல கேள்விகள் உள்ளன.
பிப்ரவரி மாதம் 2024ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்ட தாயுமானவர் திட்டம் ஆட்சி முடியும் தருவாயில் தொடக்கப்படுகிறது. அதிமுக ஆட்சியில் அறிவித்த திட்டங்களை காபி - பேஸ்ட் செய்து புதுப்பெயர் சூட்டுகிறார் முதல்வர்.
மற்றவர்களைப் பார்த்து, காப்பியடித்து, வெட்டி விளம்பரம் செய்யும் வெற்று விளம்பர ஆட்சியாளர்கள் தமிழகத்திற்குத் தேவையில்லை. சொந்தமாக சிந்தித்து, மக்களின் தேவைகளை உணர்ந்து, திட்டங்களை தீட்டுபவர்களே தமிழகத்துக்குத் தேவை என்று எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.