
இந்திய ரயில்வே நடத்திய பொறியாளர் தேர்வில் மாநில மொழிகள் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி. சு. வெங்கடேசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மேலும் மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
இதுபற்றி அவர் தனது எக்ஸ் பக்கத்தில்,
"மத்திய அரசின் துறைகளுக்கு இதுவே வேலையாகி விட்டது. ஹிந்தி மீதான விசுவாசத்தை அவ்வப்போது வெளிப்படுத்துவதில் அவர்களுக்கு ஆனந்தம்.
ஆகஸ்ட் 10, 2025 நடத்தப்பட்ட தென்னக ரயில்வே இளநிலைப் பொறியாளர் பதவி உயர்வு காலியிடத் தேர்வில் கேள்வித் தாள் ஹிந்தி, ஆங்கிலத்தில் மட்டுமே தரப்பட்டுள்ளது. மாநில மொழி(தமிழ்) உள்ளிட்ட மூன்று மொழிகளில் கேள்வித் தாள் தரப்பட வேண்டுமென்ற நடைமுறை அப்பட்டமாக மீறப்பட்டுள்ளது.
இது மொழி உரிமை மீதான தாக்குதல். மத்திய அரசுத் துறையின் தொடர்ந்த ஓரவஞ்சனையின் வெளிப்பாடே.
ஆகவே மேற்கண்ட தேர்வை ரத்து செய்து மறு தேர்வு தமிழ் கேள்வித்தாள் உள்ளிட்டு தரப்பட்டு நடத்தப்பட வேண்டுமென்று ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், தென்னக ரயில்வே பொது மேலாளருக்கும் கடிதம் எழுதி உள்ளேன்" என்று பதிவிட்டுள்ளார்.
மேலும் மற்றொரு பதிவில்,
"தொடரும் மொழியுரிமை மீதான தாக்குதல் !
தென்னக ரயில்வே இளநிலைப் பொறியாளர் பதவி உயர்வுத் தேர்வில் மாநில மொழி உள்ளிட்டு மூன்று மொழிகளில் கேள்வித்தாள் தரப்பட வேண்டுமென்பது விதி.
ஆனால் தமிழ் கேள்வித்தாள் இல்லாமல் தேர்வு நடைபெற்றுள்ளது.
ஹிந்தித் திணிப்பும் தமிழ் ஒழிப்புமே ரயில்வேயின் இரட்டை தண்டவாளங்களாக இருக்கிறது.
நடத்தப்பட்ட தேர்வை ரத்து செய்து தமிழ் கேள்வித்தாளுடன் மறுதேர்வு நடத்து!" என்று பதிவிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.