
பணமோசடி வழக்கில், தமிழக ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ. பெரியசாமிக்குத் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத் துறை சோதனை நடத்தி வரும் நிலையில், தலைமைச் செயலகத்தில் ஐ. பெரியசாமி அறையின் கதவை தலைமைச் செயலக அதிகாரிகள் பூட்டிச் சென்றனர்.
இதற்கிடையே, சென்னை பசுமைவழிச்சாலையில் அமைந்துள்ள ஐ. பெரியசாமியின் பங்களாவில், முதல் தளத்தில் இருந்த இரண்டு அறைகள் பூட்டப்பட்டிருந்த நிலையில், அதனை உடைத்து அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
சென்னை மற்றும் திண்டுகள் மாவட்டங்களில் ஊரக வளர்ச்சித் துறை திமுக அமைச்சர் ஐ.பெரியசாமியின் வீடுகள் மற்றும் அலுவலகங்கள் மற்றும், அவருக்குத் தொடர்புடையவர்களின் வீடுகளிலும் இன்று அதிகாலை முதல் அமலாக்கத்துறை அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகிறார்.
சென்னை பசுமைவழிச்சாலையில் திமுக அமைச்சர் ஐ பெரியசாமியின் இல்லத்திலும் மற்றொரு இடமான சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் விடுதிகளில் உள்ள அமைச்சரின் அறையிலும் சோதனை நடந்து வருகிறது.
அமைச்சரின் சென்னை வீட்டின் முதல் தளத்தில் இருந்த இரண்டு அறைகள் பூட்டப்பட்டிருந்ததால், தபேதாரிடம் கையெழுத்துப் பெற்றுக்கொண்டு, அறைகளின் பூட்டை உடைத்து அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.
சட்டமன்ற உறுப்பினரின் விடுதியில் பெரியசாமியின் அறையில் சோதனை செய்தபோது அங்கு சாவி ஒன்று கிடைத்துள்ளதால், அது குறித்து விசாரித்து வருவதாகவும் கூறப்படுகிறது.
அது மட்டுமின்றி அடுத்த கட்டமாக தலைமைச் தலைமை செயலகத்தில் உள்ள ஐ. பெரியசாமியின் அறையை எப்போது வேண்டுமானாலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்யலாம் என்பதால், முன்னெச்சரிக்கை காரணமாக தலைமைச் செயலக அதிகாரிகள் அமைச்சர் ஐ. பெரியசாமியின் அலுவலகக் கதவை பூட்டிவிட்டுச் சென்றனர்.
ஏற்கனவே அமலாக்கத்துறை அதிகாரிகள், தலைமைச் செயலகத்தில் உள்ள திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் அறைக்குள் சோதனை செய்தது பேசுபொருளாகியிருந்த நிலையில், தற்போது ஐ. பெரியசாமி அறையிலும் சோதனை நடத்தப்படுமா என்று சந்தேகம் எழுந்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.