கட்சியின் விதிகளை மீறியதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில செயலாளர் அயன்புரம் கே. சரவணன் கட்சியின் அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்படுவதாக தமிழக காங்கிரஸ் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் அமைப்புச் செயலாளர் ராம் மோகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில செயலாளர் அயன்புரம் கே. சரவணன் காங்கிரஸ் கட்சியின் கண்ணியத்தையும், நன்மதிப்பையும் சீர்குலைக்கும் வகையிலும், கட்சிக் கட்டுப்பாட்டை மீறியும் சமூக ஊடகங்களில் தொலைபேசி உரையாடலை பதிவு செய்து பொது வெளியில் வெளியிட்ட செயல் காங்கிரஸ் கட்சியின் அமைப்பு சட்ட விதியின்படி ஒழுங்கு நடவடிக்கைக்கு உட்பட்டதாகும்.
அயன்புரம் கே. சரவணனின் இத்தகைய கண்ணியமற்ற செயல் காங்கிரஸ் கட்சியின் ஒழுங்கு நடவடிக்கை விதி எண். XIX (f) (iv) 4.(e) -ன்படி கட்சியின் நன்மதிப்பை பொதுவெளியில் வேண்டுமென்றே சிறுமைப்படுத்தும் வகையில் ஈடுபடுவது அல்லது காங்கிரஸ் கமிட்டிக்கு எதிராக பிரசாரம் செய்வது அல்லது கட்சி நிர்வாகிகளுக்கு எதிராக செயல்படுவது உள்ளிட்ட ஒழுங்குமீறிய செயல்களில் அடங்கும்.
எனவே, அயன்புரம் கே. சரவணன் மேற்குறிப்பிட்ட காங்கிரஸ் கட்சியின் விதிகளின்படி ஒழுங்குமீறிய நடவடிக்கையில் ஈடுபட்ட காரணத்தினால் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் தற்காலிகமாக நீக்கப்படுகிறார்.
காங்கிரஸ் கட்சியினர் இனிவரும் நாட்களில் ஒழுங்கு மீறும் வகையில் இதுபோன்ற தங்களின் தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சி காரணமாக தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளின் நற்பெயருக்கு களங்கம் கற்பிக்கும் வகையில் தரம் தாழ்ந்து சமூக ஊடகங்களிலோ அல்லது பொது வெளியிலோ கட்சியின் கட்டுப்பாட்டையும், கண்ணியத்தையும் சீர்குலைக்கின்ற வகையில் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பேசினாலோ அல்லது பதிவுகள் செய்தாலோ அவர்கள் மீது காங்கிரஸ் கட்சியின் சட்ட விதிகளின்படி ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.