/

சுற்றுலாத் துறை வருவாய் அதிகரிப்பு! தமிழக அரசு பெருமிதம்!

தமிழக சுற்றுலாத் துறையில் வருவாய் அதிகரித்திருப்பதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

News image
தஞ்சை பெரிய கோயில்
Updated On :16 ஆகஸ்ட் 2025, 7:32 am

இணையதளச் செய்திப் பிரிவு

தமிழக சுற்றுலாத் துறையில் வருவாய் அதிகரித்திருப்பதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

2024ஆம் ஆண்டில், உலகளவில் ஏறத்தாழ 140 கோடி சுற்றுலாப் பயணிகள் பயணம் செய்துள்ளனர். இது முந்தைய ஆண்டைவிட 11 சதவிகிதம் அதிகமாகும். இந்திய அளவில் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளின் வருகை 2022-ல் 81 லட்சமும், 2023-ல் 1.9 கோடியும், இந்தியாவில் உள்நாட்டுச் சுற்றுலாப் பயணிகளின் வருகை 2022-ல் 173 கோடியிலிருந்து 2023-ல் 251கோடியாக உயர்ந்துள்ளது.

இதேபோல, தமிழ்நாட்டுக்கு வருகைதந்த வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை 2022-ல் 1.4 லட்சத்திலிருந்து 2023-ல் 11 லட்சமாக அதிகரித்துள்ளது. அதேபோல, உள்நாட்டு சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை 2022-ல் 21.8 கோடியிலிருந்து 2023-ல் 28.6 கோடியாக அதிகரித்துள்ளது. இதன் மூலம், மக்களிடையே சுற்றுலா குறித்த ஆர்வம் அதிகரித்திருப்பது தெரிய வருகிறது.

தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் கடந்த ஆண்டுகளைவிட 2024ஆம் ஆண்டில் ரூ.28.69 கோடி அதிக வருவாய் ஈட்டி மாபெரும் சாதனை படைத்துள்ளது.

தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தால் நடத்தப்பெறும் 26 உணவு விடுதிகள் மூலமாகவும், அனைத்து சுற்றுலாக்களையும் இணையத்தில் பதிவுசெய்யும் சேவைகள் காரணமாகவும் 2021 மே முதல் 2025 ஜனவரி வரை ரூ.129.28 கோடி வருவாய் ஈட்டி மாபெரும் சாதனை நிகழ்த்தியுள்ளது.

4000 கிலோ மீட்டர் நீள ரயில் பாதை வசதிகள், சாலை வசதிகள், சென்னை, தூத்துக்குடி, எண்ணூர், நாகை ஆகிய முக்கிய துறைமுகங்கள், 17 சிறு துறைமுகங்கள், விரைவான விமானப் போக்குவரத்துக்கு உதவும் சென்னை, மதுரை, திருச்சி, கோவை ஆகிய சர்வதேச விமான நிலையங்கள் சேலம், தூத்துக்குடி முதலிய உள்நாட்டு விமான நிலையங்கள் ஆகியவை சுற்றுலாத் துறை வளர்ச்சிக்குப் பெரிதும் துணைபுரிகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.