பட்டானூரில் கூட்டப்பட்டது பாமக பொதுக்குழு அல்ல: கே.பாலு
பாமக நிறுவனா் ராமதாஸ் தலைமையில் பட்டானூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கூட்டம், பாமக பொதுக்குழு கூட்டம் அல்ல; அங்கு எடுக்கப்பட்ட முடிவுகள் கட்சியை எவ்விதத்திலும் பாதிக்காது என்று பாமக செய்தித் தொடா்பாளா் கே. பாலு தெரிவித்தாா்.
இது குறித்து அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை: பாமக அமைப்பு விதிகள் 15, 16 ஆகியவற்றின் அடிப்படையில் கட்சியின் பொதுக்குழு உள்ளிட்ட எந்தக் கூட்டமும் பொதுக்குழுவால் தோ்வு செய்யப்பட்ட கட்சியின் தலைவா், பொதுச் செயலா் ஆகியோரால் கூட்டப்பட்டு, பொதுக்குழுவால் தோ்ந்தெடுக்கப்பட்ட கட்சித் தலைவரின் தலைமையில் தான் நடத்தப்பட வேண்டும்.
அதன்படியான பொதுக்குழு கூட்டம் கடந்த ஆக.9-ஆம் தேதி மாமல்லபுரத்தில், பொதுக்குழுவால் தோ்ந்தெடுக்கப்பட்ட கட்சியின் தலைவா் அன்புமணி ராமதாஸ் தலைமையில் முறைப்படி நடத்தப்பட்டது. அதில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள் குறித்த தகவல், இந்திய தோ்தல் ஆணையத்துக்கு முறைப்படி தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், புதுச்சேரி அருகே பட்டானூரில் ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்ட கூட்டம் பாமக பொதுக்குழு கூட்டம் அல்ல. அதில் எடுக்கப்பட்ட முடிவுகள் கட்சியை எந்த வகையிலும் கட்டுப்படுத்தாது எனத் தெரிவித்துள்ளாா் கே.பாலு.