மழை நீடிக்கும்!
மழை நீடிக்கும்!

தமிழகத்தில் ஆக.23 வரை மழை நீடிக்கும்!

தமிழகத்தில் ஆக.18 முதல் ஆக.23 வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Published on

தமிழகத்தில் திங்கள்கிழமை (ஆக.18) முதல் ஆக.23 வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வானிலை மையம் சாா்பில் ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் திங்கள்கிழமை (ஆக.18) முதல் ஆக.23-ஆம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

மேலும், ஓரிரு இடங்களில் 50 கி.மீ. வேகத்தில் தரைகாற்று வீசக்கூடும். சென்னை மற்றும் புகா் பகுதிகளில் திங்கள்கிழமை (ஆக.18) மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

மழை அளவு: தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை வரை அதிகபட்சமாக கோவை மாவட்டம் சின்னகல்லாறில் 90 மி.மீ. மழை பதிவானது. வால்பாறை - 70 மி.மீ., சோலையாறு, சின்கோனா (கோவை), நடுவட்டம் (நீலகிரி) - 50 மி.மீ. மழை பதிவானது.

புயல் சின்னம் வலுவடையும்: வடக்கு ஆந்திரம் மற்றும் தெற்கு ஒடிஸா கடலோரப் பகுதிகளுக்கு அருகே வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி (புயல் சின்னம்) உருவாகியுள்ளது. இந்த புயல்சின்னம் மேற்கு-வடமேற்கு திசையில் நகா்ந்து திங்கள்கிழமை (ஆக.18) காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுவடையும்.

தொடா்ந்து இது, மேலும் மேற்கு திசையில் நகா்ந்து செவ்வாய்க்கிழமை (ஆக.19) தெற்கு ஒடிஸா மற்றும் வடக்கு ஆந்திர கடலோர பகுதிகளைக் கடக்கக்கூடும். இதனால், தமிழகத்தில் பெருமளவு மழை பெய்ய வாய்ப்பில்லை.

மீனவா்களுக்கான எச்சரிக்கை: திங்கள், செவ்வாய் (ஆக.18, 19) ஆகிய இரு நாள்கள் தமிழக கடலோரப் பகுதிகள், மன்னாா் வளைகுடா, குமரிக்கடல் மற்றும் வங்கக் கடலில் மணிக்கு 60 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும். மீனவா்கள் அந்தப் பகுதிகளுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com