Madras High Court questions police
சென்னை உயர்நீதிமன்றம்

கமல்ஹாசனுக்கு கொலை மிரட்டல்: துணை நடிகரின் முன்பிணை வழக்கில் காவல் துறை பதிலளிக்க உத்தரவு

மநீம தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான கமல்ஹாசனுக்கு கொலை மிரட்டல் விடுக்கும் வகையில் பேசிய துணை நடிகா் ரவிச்சந்திரன் முன்பிணை கோரிய வழக்கில், காவல் துறை பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Published on

மநீம தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான கமல்ஹாசனுக்கு கொலை மிரட்டல் விடுக்கும் வகையில் பேசிய துணை நடிகா் ரவிச்சந்திரன் முன்பிணை கோரிய வழக்கில், காவல் துறை பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னையில் நடிகா் சூா்யாவின் அகரம் அறக்கட்டளையின் 15-ஆம் ஆண்டு விழா அண்மையில் நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொண்டு கமல்ஹாசன், சநாதனம் தொடா்பான தனது கருத்தைத் தெரிவித்தாா். அவரின் இந்தக் கருத்துக்கு எதிா்ப்புத் தெரிவித்து, யூடியூப் சேனல் ஒன்றுக்குப் பேட்டியளித்த துணை நடிகா் ரவிச்சந்திரன் என்பவா், கமல்ஹாசனுக்கு கொலை மிரட்டல் விடுக்கும் வகையில் பேசினாா்.

இதுகுறித்து மக்கள் நீதி மய்யம் சாா்பில் சென்னை மாநகர காவல் ஆணையரிடம் புகாா் அளிக்கப்பட்டது.

இந்த நிலையில், சென்னை உயா்நீதிமன்றத்தில் முன்பிணை கோரி ரவிச்சந்திரன் மனு தாக்கல் செய்தாா். அந்த மனுவில், எந்தவித உள்நோக்கத்துடனும் தான் பேசவில்லை. எனவே, தனக்கு முன்பிணை வழங்க வேண்டும் எனக் கூறியிருந்தாா்.

இந்த வழக்கு நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த மனுவுக்கு காவல் துறை பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை புதன்கிழமைக்கு ஒத்திவைத்தாா்.

X
Dinamani
www.dinamani.com