
திருப்பரங்குன்றம்: தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு, மதுரை பாரப்பத்தியில் தொடங்கியது. விழா நடைபெறும் மேடைக்கு கட்சித் தலைவர் விஜய் வந்த நிலையில், அவரைப் பார்த்ததும், மாநாட்டுக்கு வந்திருந்த தொண்டர்கள் பலரும் கலைந்து செல்லத் தொடங்கினர்.
விழா இன்று மாலைதான் தொடங்கும் என்றாலும், முன்கூட்டியே காலையில் இருந்து ஏராளமான மக்கள் கூட்டத்துக்கு வந்துவிட்டனர்.
காலை முதல் கூட்டம் குவிந்துவந்த நிலையில், மாநாடு தொடங்கிய சற்று நேரத்திலேயே, தொண்டர்கள் மாநாட்டிலிருந்து புறப்படத் தொடங்கியிருக்கிறார்கள்.
கடும் வெயில் காரணமாக அவதிக்குள்ளாகி வந்த லட்சக்கணக்கான தொண்டர்கள், விஜயை ஒரு முறை நேரில் பார்க்க வேண்டும் என்பதற்காகவே இவ்வளவு நேரம் காத்திருந்தது போல, அவரைப் பார்த்து, அவர் நடைமேடையில் நடந்து செல்வதைப் பார்த்து கோஷம் எழுப்பினர். பிறகு, விழா தொடங்கியதுமே அவர்களும் புறப்படத் தொடங்கிவிட்டனர்.
இதுவரை திடல் முழுமையாக நிரம்பியிருந்த நிலையில், விழா தொடங்கியதும் பல இடங்கள் காலியாகிவிட்டன. சாலைகளில் ஏராளமானோர் கூட்டம் கூட்டமாக சென்று கொண்டிருக்கிறார்கள். இதனால் பாரபத்தி திடலை விடவும் வெளியே கூட்டம் அலைமோதுவது போல காணப்படுகிறது.
காலையில் இருந்து கொளுத்தும் வெயிலில் காத்திருந்தது என்னவோ, விஜயை நேரில் பார்க்கத்தான் என்பது போல, குறிப்பாக ரேம்ப் வாக் வந்த விஜயை நேரில் பார்த்ததுமே, அங்கிருந்து கூட்டம் கலையத் தொடங்கியது. நாங்கள் கட்சித் தலைவரை நேரில் பார்க்கவே வந்தோம். பார்த்துவிட்டோம் என்று பலரும் சொல்கிறார்கள்.
அதுபோல, சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் வந்திருப்பவர்கள், நெரிசலில் சிக்கக் கூடாது என்பதற்காக விரைவாகக் கிளம்பும் நிலை ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
கடும் வெயில் மற்றும் கூட்டம் அலைமோதிய காரணத்தால் 4 மணிக்குத் தொடங்க வேண்டிய மாநாடு முன்கூட்டியே தொடங்கியிருக்கிறது. விழாவுக்கு வந்த விஜய் நடைமேடையில் ரேம்ப் வாக் சென்றபோது, பல ரசிகர்கள் ஓடி வந்து விஜய்க்கு துண்டு வழங்கினர். ஒருவர் மாலையைக் கொண்டுவந்து கொடுத்தபோது, அதை அவர் கழுத்திலேயே போட்டு அனுப்பிவைத்தார் விஜய்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.