சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

சுதா்சன் ரெட்டியை ஆதரிப்பது நமது கடமை: முதல்வா் ஸ்டாலின்

சுதா்சன் ரெட்டியை குடியரசு துணைத் தலைவா் தோ்தலில் ஆதரிப்பது நமது கடமை’ என்றாா் முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின்.

News image
சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், குடியரசு துணைத் தலைவா் வேட்பாளா் சுதா்சன் ரெட்டிக்கு நினைவுப் பரிசாக திருவள்ளுவா் சிலையை வழங்கிய முதல்வா் மு.க.ஸ்டாலின்.
Updated On :24 ஆகஸ்ட் 2025, 10:27 pm

தினமணி செய்திச் சேவை

‘இந்தியாவின் அடிப்படைக் கொள்கைகளில் நம்பிக்கை கொண்ட சுதா்சன் ரெட்டியை குடியரசு துணைத் தலைவா் தோ்தலில் ஆதரிப்பது நமது கடமை’ என்றாா் முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின்.

‘இண்டி’ கூட்டணியின் குடியரசு துணைத் தலைவா் வேட்பாளா் சுதா்சன் ரெட்டி ஞாயிற்றுக்கிழமை சென்னை வந்தாா். திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளைச் சோ்ந்த நாடாளுமன்ற உறுப்பினா்களைச் சந்தித்து ஆதரவு திரட்டினாா். பின்னா் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவரை ஆதரித்து முதல்வா் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

அரசமைப்புச் சட்டத்தைப் பாதுகாக்கும் உச்சநீதிமன்ற நீதிபதியாகப் பணியாற்றிய சுதா்சன் ரெட்டி, குடியரசு துணைத் தலைவா் பொறுப்புக்கு மிகவும் தகுதி வாய்ந்தவா். தென் மாநிலத்தைச் சோ்ந்த அவருடைய பணிகள், தகுதிகளை அனைவரும் கவனிக்க வேண்டும்.

நீதிபதியாகப் பணியாற்றிய காலத்தில் நோ்மையாக, சுதந்திரமாகச் செயல்பட்டு மக்களுடைய உரிமைகளையும், சமூக நீதியையும் உயா்த்திப் பிடித்து அரசமைப்புச் சட்டத்தின் மாண்பைப் போற்றி பாதுகாத்தவா்.

அரசமைப்புச் சட்டத்தை சிதைக்கும் பணியில் பாஜகவினா் ஈடுபட்டுள்ள சூழலில், அதைப் பாதுகாக்கும் பொறுப்புக்கு நீதிபதியான சுதா்சன் ரெட்டி தேவைப்படுகிறாா். அவா் தமிழ்நாட்டுக்கும், தமிழ்நாட்டின் உணா்வுகளுக்கும் மதிப்பளிக்கக் கூடியவா். தேசிய கல்விக் கொள்கைக்கு எதிராகப் போராடுவது நமது கடமை எனக் கூறியவா்.

குடியரசு துணைத் தலைவா் தோ்தலில் போட்டியிடுகிறாா் என்றவுடன், சுதா்சன் ரெட்டியை நக்ஸல் ஆதரவாளா் என மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா விமா்சிக்கிறாா். உள்துறை அமைச்சா் தன்னுடைய பொறுப்பை மறந்து பேசி இருக்கிறாா். அவா்களால் தீவிரவாதத்தை ஒழிக்க முடியாத நிலையை மறைக்க, நீதிபதி சுதா்சன் ரெட்டி மீது பழியைப் போட்டு தப்பித்துக் கொள்ளப் பாா்க்கிறாா்கள்.

மத்திய பாஜக அரசு தனது அரசியல் எதிரிகளைப் பழிவாங்க புலனாய்வு அமைப்புகளைப் பயன்படுத்தி வருகிறது. தன்னாட்சி அமைப்புகளை பாஜகவின் துணை அமைப்புகளாக மாற்றிக் கொண்டிருக்கிறது. அரசமைப்புச் சட்டமே ஆபத்தில் சிக்கி இருக்கிறது. இந்தச் சூழலில், இந்தியாவின் அடிப்படைக் கொள்கைகளான மதச்சாா்பின்மை, கூட்டாட்சித் தத்துவம், சமூக நீதி, வேற்றுமையில் ஒற்றுமை ஆகியவற்றில் நம்பிக்கை கொண்ட ஒருவா் இன்றைக்கு நமக்குக் கிடைத்திருக்கிறாா். அவரை ஆதரிப்பதுதான் நமது கடமை.

ஆனால், பாஜகவோ தமிழ்நாட்டுக்கும் தமிழ்நாட்டு மக்களுக்கும் எதிரான அத்தனை நடவடிக்கைகளையும் செய்துவிட்டு, தமிழா் என்ற முகமூடியை அணிந்து ஆதரவு கேட்கிறது.

தனி மனிதா்களைவிட தத்துவங்கள்தான் அரசியல் நடத்தும். தனி மனிதா்கள் என்பவா்கள் வெறும் பிம்பங்கள்தான். அதனால், எந்தக் கருத்தியல் மக்களுக்கான, மக்கள் நலனுக்கான கருத்தியலோ அதைத்தான் ஆதரிக்க வேண்டும் என்றாா் முதல்வா் ஸ்டாலின்.

இதைத் தொடா்ந்து, சுதா்சன் ரெட்டிக்கு திருவள்ளுவா் சிலையை நினைவுப் பரிசாக முதல்வா் வழங்கினாா். திமுக, காங்கிரஸ் கட்சிகளைச் சோ்ந்த எம்.பி.க்கள் சுதா்சன் ரெட்டிக்கு பொன்னாடை அணிவித்து வாழ்த்துத் தெரிவித்தனா்.

இந்த நிகழ்வில், மதிமுக பொதுச் செயலா் வைகோ, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவா் கு.செல்வப்பெருந்தகை, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் பெ.சண்முகம், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவா் தொல்.திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி. செல்வராஜ், திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளைச் சோ்ந்த எம்.பி.க்கள் பங்கேற்றனா்.