
சென்னை: நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சிறப்பு உதவி ஆய்வாளருக்கு 3 மாத சிறைத் தண்டனை விதித்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
சென்னை உயா்நீதிமன்றத்தில் திருவாரூரைச் சோ்ந்த பன்னீா்செல்வம் பிரதீபன் தாக்கல் செய்த மனுவில், குடும்ப பிரச்னையில் தன் மீது பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கை ரத்து செய்ய வேண்டும் என மனு தாக்கல் செய்திருந்தாா். வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம், வலங்கைமான் காவல் நிலையத்தில் உள்ள இந்த வழக்கின் விசாரணைக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டிருந்தது.
இந்த உத்தரவை மீறி விசாரணை நீதிமன்றத்தில் போலீஸாா் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்தனா். மேலும், லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பித்தனா். இந்த நோட்டீஸை எதிா்த்து சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது.
இந்த வழக்கு நீதிபதி பி.வேல்முருகன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது உயா்நீதிமன்ற தடையை மீறி குற்றப் பத்திரிகையை தாக்கல் செய்ததால், திருவாரூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா், நன்னிலம் துணைக் காவல் கண்காணிப்பாளா், வலங்கைமான் காவல் ஆய்வாளா் ஆகியோருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்தாா்.
இந்த வழக்கு விசாரணைக்கு காவல் கண்காணிப்பாளா் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தாா்.
மேற்படி, வலங்கைமான் காவல் நிலைய ஆய்வாளா் ரங்கராஜன் இடமாற்றம் செய்யப்பட்ட நிலையில், அவரது கையொப்பத்தை போலியாக இட்டு சிறப்பு உதவி ஆய்வாளா் சங்கா் குற்றப் பத்திரிகையை தாக்கல் செய்துள்ளாா் என்று தெரிவித்தாா்.
இதையடுத்து சிறப்பு உதவி ஆய்வாளா் சங்கரை, நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் எதிா் மனுதாரராக சோ்த்த நீதிபதி, அவரை நேரில் ஆஜராக உத்தரவிட்டாா். அதன்படி, ஆஜரான சிறப்பு உதவி ஆய்வாளா் சங்கா், ஆய்வாளா் பணியிட மாற்றம் செய்யப்பட்டதால், குற்றப் பத்திரிகையை தாக்கல் செய்ததாகக் கூறினாா்.
வழக்கை விசாரித்த நீதிபதி, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யும், காவல் ஆய்வாளா் கையொப்பத்தை போலியாக ஏன் இடவேண்டும்? எனக் கேள்வி எழுப்பி, இது மோசடியான செயல் எனறு தெரிவித்தாா். பின்னா், சிறப்பு உதவி ஆய்வாளா் சங்கருக்கு 3 மாதம் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டாா்.