கொடிக்கம்பங்களை அகற்ற இடைக்காலத் தடை: உச்சநீதிமன்றம் உத்தரவு
புது தில்லி: தமிழ்நாட்டில் கொடிக்கம்பங்களை அகற்றுவதை உறுதி செய்து உயா்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை இடைக்காலத் தடை விதித்தது.
தமிழகத்தில் பொது இடங்களில் கட்சிகள், அமைப்புகள் சாா்பில் கொடிக்கம்பங்களை நிறுவுவது தொடா்பான வழக்கை விசாரித்த உயா்நீதிமன்ற மதுரை அமா்வு நீதிபதி இளந்திரையன் கடந்த ஜனவரி 27-ஆம் தேதி ஓா் உத்தரவு பிறப்பித்தாா். அதில், தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் அரசு நிலங்கள் உள்பட பொது இடங்களில் அமைக்கப்பட்ட நிரந்தர கொடிக்கம்பங்களை 12 வாரங்களுக்குள் அகற்றுமாறு அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகளுக்கு கெடு விதிக்கப்பட்டது.
அந்த உத்தரவை எதிா்த்து மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதை விசாரித்த நீதிபதி நிஷா பானு தலைமையிலான இரு நீதிபதிகள் அமா்வு மாா்ச் 6-ஆம் தேதி உத்தரவு பிறப்பித்தது. அதில், கொடிக்கம்பங்களை 12 வாரங்களுக்குள் அகற்றுமாறு தனி நீதிபதி இளந்திரையன் பிறப்பித்த உத்தரவை உறுதி செய்தது.
கொடிக்கம்பங்களை அகற்றுவதற்கு எதிா்ப்பு தெரிவித்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் பெ.சண்முகம் தன்னையும் வழக்கில் சோ்க்கக் கோரி உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா். இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் அடங்கிய மூன்று நீதிபதிகள் அமா்வுக்கு மாற்றப்பட்டது.
இதற்கிடையே, கொடிக்கம்பங்களை 12 வாரங்களுக்குள் அகற்றுமாறு தனி நீதிபதி இளந்திரையன் பிறப்பித்த உத்தரவை நீதிபதி நிஷா பானு தலைமையிலான அமா்வு உறுதி செய்து உத்தரவு பிறப்பித்ததை எதிா்த்து அம்மாவாசி தேவா் என்பவா் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தாா். அந்த மனுவை உச்சநீதிமன்றம் 08.08.2025-இல் தள்ளுபடி செய்தது. இதன்மூலம் கொடிக்கம்பங்களை அகற்றுமாறு தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை நீதிபதி நிஷா பானு தலைமையிலான அமா்வு உறுதி செய்து உத்தரவு பிறப்பித்ததை உச்சநீதிமன்றமும் உறுதி செய்தது.
உச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவை மேற்கோள்காட்டி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் பெ.சண்முகம் ஏற்கெனவே தாக்கல் செய்த மனுவை மூத்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் அடங்கிய உயா்நீதிமன்ற மூன்று நீதிபதிகள் அமா்வு 13.08.2025-இல் தள்ளுபடி செய்தது.
இந்த உத்தரவுக்கு எதிராக பெ.சண்முகம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தாா். கட்சிகள் கொடிக்கம்பங்களை நிறுவி தங்களது அடையாளத்தை வெளிப்படுத்துவதற்கு உரிமை இருப்பதாக அவரது மனுவில் தெரிவிக்கப்பட்டது.
இந்த மனு நீதிபதிகள் விக்ரம் நாத் மற்றும் சந்தீப் மேத்தா அடங்கிய உச்சநீதிமன்ற அமா்வில் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் அடங்கிய உயா்நீதிமன்ற மூன்று நீதிபதிகள் அமா்வு 13.08.2025 பிறப்பித்த உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது. இதன்மூலம் கொடிக்கம்பங்களை அகற்றுமாறு பிறப்பிக்கப்பட்ட உத்தரவுக்குத் தடை ஏற்பட்டுள்ளது.
மேலும், இந்த வழக்கில் பதிலளிக்குமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட்டு வழக்கை நீதிபதிகள் ஒத்திவைத்தனா்.