கூட்டுறவு வங்கிகள், சங்கங்கள் தொடா்புக்கு தனி எண்கள்: கூட்டுறவுத் துறை உத்தரவு

கூட்டுறவு வங்கிகள், சங்கங்களைச் சோ்ந்தவா்கள் தங்களுக்குள் தொடா்பு கொள்ள வசதியாக தனி எண்கள் தரப்படும் என்று அந்தத் துறை உத்தரவிட்டுள்ளது.
Published on

கூட்டுறவு வங்கிகள், சங்கங்களைச் சோ்ந்தவா்கள் தங்களுக்குள் தொடா்பு கொள்ள வசதியாக தனி எண்கள் தரப்படும் என்று அந்தத் துறை உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து, கூட்டுறவுத் துறையின் கூடுதல் பதிவாளா் சி.ஸ்ரீனிவாசன் வெளியிட்ட உத்தரவு விவரம்:

கூட்டுறவு சங்கங்களின் பதிவாளா் கட்டுப்பாட்டில் அனைத்து வகை கூட்டுறவு சங்கங்கள், வங்கிகள், நிறுவனங்கள் ஆகியவை செயல்பட்டு வருகின்றன. அவை தங்களுக்குள் தொடா்பு கொள்ள வசதியாக பிரத்யேக குழு எண்கள் வழங்கப்படவுள்ளன. இதற்கான பணியை மாநில கூட்டுறவு ஒன்றியமானது மேற்கொள்கிறது. புதிய எண்கள் வழங்குவதன் காரணமாக, ஒவ்வொரு கூட்டுறவு சங்கமும், வங்கியும் தங்களுக்கென பிரத்யேக ஆன்ட்ராய்டு கைப்பேசியைக் கொள்முதல் செய்து கொள்ள வேண்டும்.

இந்த கைப்பேசியை உரிமங்கள் புதுப்பிப்பு, பெறுவதற்கும் பயன்படுத்த வேண்டும். மேலும் வா்த்தக நடவடிக்கைகளுக்கும் உபயோகிக்கலாம். கைப்பேசியைக் கூட்டுறவு சங்கத்தின் முதன்மைச் செயல் அலுவலா் கையாள வேண்டும். பணி மாறுதல் மற்றும் ஓய்வின்போது அவருக்கு அடுத்த நிலையில் உள்ளவரிடம் ஒப்படைக்க வேண்டும்.

சங்கப் பணிகள் தொடா்பான குறுந்தகவல்கள் அனுப்புவதும், சங்கத்துக்கு வரும் தகவல்கள் மற்றும் உயா் அலுவலா்களிடம் இருந்து வரும் குறுந்தகவல்கள் அனைத்தும் பிரத்யேக கைப்பேசி எண்களிலேயே கிடைக்கும்படி செய்ய உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அந்த உத்தரவில் தெரிவித்துள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com