தேமுதிக யாருடன் கூட்டணி வைக்கும் என்பது ஜனவரி 9 ஆம் தேதி கடலூரில் நடைபெறும் மாநாட்டில்தான் அறிவிப்போம் என தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்.
தேமுதிக திருச்சி மாவட்ட செயலாளர் டிவி கணேசன் இல்ல திருமண விழா திருச்சியில் நடைபெற்றது. இந்த திருமண விழாவில் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், சுதீஷ் உள்ளிட்டோர் கலந்துகொண்டு திருமணத்தை நடத்தி வைத்தனர்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய பிரேமலதா விஜயகாந்த்,
"எடப்பாடி பழனிசாமி வேறு டிராக்கில் மக்களை சந்திக்கிறார். நாங்கள் எங்கள் கட்சியின் செயல்பாடுகள் அடிப்படையில் பயணம் செய்கிறோம். எங்கள் பயணம் வேறு, அவரின் பயணம் வேறு.
தேமுதிக யாருடன் கூட்டணி வைக்கும் என்பதை ஜனவரி 9 ஆம் தேதி கடலூரில் நடைபெறும் மாநாட்டில் அறிவிப்போம். அதுவரை எங்கள் கட்சி வளர்ச்சியில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறோம். ஜனவரி 9 ஆம் தேதி வரை சற்று காத்திருங்கள். தேமுதிக அங்கம் வகிக்கும் கூட்டணி மகத்தான வெற்றி பெறும்.
கூட்டணி ஆட்சியை தேமுதிக வரவேற்கிறது. அதிகாரம் பகிர்ந்தளிக்கப்படும்போது இன்னும் சிறப்பாக செயல்பட முடியும். தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி அமைந்ததில்லை. அது செயல்படுத்தும்போதுதான் அதன் நிறை குறைகள் தெரியும்.
தேமுதிகவுடன் அனைத்து கட்சியினரும் நட்போடுதான் பழகி வருகிறார்கள். ஆனால் கூட்டணி என்கிற வார்த்தைக்குள் நாங்கள் செல்லவில்லை. ஜனவரி 9 ஆம் தேதிதான் அதற்கான விடை தெரியும்.
எம்.ஜி.ஆருக்குப் பின் விஜயகாந்த்தான் மக்கள் தலைவர் என்பதை உலகம் ஏற்றுகொண்டுள்ளது. அவர் குறித்து அரசியலுக்கு வருபவர்கள் யாரும் பேசாமல் இருக்க முடியாது. விஜயகாந்த் குறித்து புதிதாக கட்சி தொடங்குபவர்கள்கூட பேசுவது மகிழ்ச்சிதான்.
2005 ஆம் ஆண்டு நடந்த தேமுதிக மாநாடு இன்றும் சரித்திரமாக உள்ளது. எந்தவித அசம்பாவிதமும் நடைபெறவில்லை.
தவெக மாநாட்டில் ஏற்பாடுகள் சிறப்பாக செய்திருந்தார்கள். அனைத்தையும் குறையாகவே பார்க்கக் கூடாது. விஜய் ரேம்ப் வாக் சென்ற போது சிலர் ஆர்வத்தில் அதில் ஏறினர். அதை பவுன்சர்கள் கட்டுப்படுத்தினர். வேண்டுமென்று யாரும் தள்ளுவது கிடையாது. மாபெரும் கூட்டம் இருக்கும்போது இது போன்று நடப்பது எல்லா கட்சியிலும் சகஜம்தான்.
கொடி, பேனர்கள் வைக்க காவல் துறை அனுமதி மறுக்கிறார்கள். தேமுதிகவை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் பார்க்க கூடாது. அனுமதி கொடுத்தால் அனைவருக்கும் கொடுக்க வேண்டும், இல்லையென்றால் யாருக்கும் அனுமதி கொடுக்கக் கூடாது. அரசு இதில் ஒரு நிலைப்பாட்டை எடுக்க வேண்டும்.
திரைத்துறையில் 50- வது ஆண்டுக்கு ரஜினிகாந்துக்கு நான்தான் முதலில் வாழ்த்து கூறினேன். விஜயகாந்த் இருந்திருந்தால் அவர் விழாவே எடுத்திருப்பார். ரஜினிகாந்த்தின் கூலி படம் வரை அனைத்து படங்களும் சிறப்பான வெற்றி பெற்றுள்ளன. இந்தியாவில் இதுபோல் எங்கும் நடந்ததில்லை.
தேர்தலுக்கு முன் திமுக ஏராளமான வாக்குறுதிகளை கொடுத்து ஆட்சிக்கு வந்தார்கள். அதில் எத்தனை நிறைவேற்றப்பட்டுள்ளது என்பது மக்களின் கேள்வியாக உள்ளது.
தற்போது திமுக செயல்படுத்தும் திட்டங்கள் தேர்தல் வாக்குறுதியில் கொடுத்தவையா, புது திட்டங்களா என்பதை பார்க்க வேண்டி உள்ளது. கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றும்போதுதான் இந்த ஆட்சியை சிறந்த ஆட்சியாக மக்கள் ஏற்றுக் கொள்வார்கள்" என்றார்.
இந்த திருமண விழாவில் அமைச்சர் கே.என்.நேரு கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். பிரேமலதா மற்றும் அமைச்சர் கே.என் நேரு மரியாதை நிமித்தமாக பேசிக் கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.