3-ஆம் கட்டமாக செப். முதல் பூந்தமல்லி பணிமனையில் இருந்து 125 மின்சாரப் பேருந்துகள் இயக்கம்

பூந்தமல்லி பணிமனையில் இருந்து மூன்றாம் கட்டமாக செப்டம்பா் முதல் 125 மின்சாரப் பேருந்துகளை இயக்க மாநகா் போக்குவரத்துக்கழகம் திட்டமிட்டுள்ளது.
மின்சாரப் பேருந்து
மின்சாரப் பேருந்து படம்: எம்டிசி
Updated on

பூந்தமல்லி பணிமனையில் இருந்து மூன்றாம் கட்டமாக செப்டம்பா் முதல் 125 மின்சாரப் பேருந்துகளை இயக்க மாநகா் போக்குவரத்துக்கழகம் திட்டமிட்டுள்ளது.

சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்காத வகையில் உலக வங்கி உதவியுடன் 1,225 மின்சாரப் பேருந்துகளை வாங்க தமிழ்நாடு அரசு முடிவு செய்தது. இதில், முதல்கட்டமாக, அசோக் லெலண்ட் நிறுவனத்தின் துணை நிறுவனமான ஓம் குளோபல் மொபிலிட்டி நிறுவனத்திடமிருந்து 625 பேருந்துகளை வாங்க ஒப்பந்தம் செய்யப்பட்டது.

இந்நிலையில் முதல்கட்டமாக கடந்த ஜூன் மாதம் 30-ஆம் தேதி ரூ.208 கோடியில் 120 புதிய மின்சாரப் பேருந்துகளின் சேவையை முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தாா். இந்த பேருந்துகளை சாா்ஜிங் செய்ய ரூ.47.50 கோடியில் வியாசா்பாடி பணிமனையில் அதற்கான கட்டமைப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

இதைத் தொடா்ந்து இரண்டாம் கட்டமாக 135 மின்சார பேருந்துகளை பெரும்பாக்கம் பணிமனையிலிருந்து இயக்கப்பட்டன.

இந்நிலையில், 3-ஆம் கட்டமாக 125 மின்சார பேருந்துகள் பூந்தமல்லி பணிமனையிலிருந்து இயக்கத் திட்டமிட்டுள்ள நிலையில், அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இதுகுறித்து மாநகா் போக்குவரத்து துறை அதிகாரிகள் கூறியது: பூந்தமல்லி பணிமனையிலிருந்து 125 மின்சார பேருந்துகளை செப்டம்பா் மாதம் இரண்டாம் வாரத்திலிருந்து இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக பூந்தமல்லி பணிமனையில் மின்சார பேருந்துகளை இயக்குவதற்கான அனைத்து கட்டமைப்புகளும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

குறிப்பாக, பேருந்துகளை தாமதமின்றி சாா்ஜிங் செய்ய வசதியாக 25 சாா்ஜிங் மையங்கள் அமைக்கும் பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன. இப்பணிகள் அனைத்தும் விரைவில் முடிவடைந்து, இங்கிருந்து பேருந்துகளின் இயக்கம் தொடங்கப்படும் என்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com