கனமழையால் தமிழ்நாடு முழுவதும் நீரில் மூழ்கி சேதமடைந்த விளை நிலத்துக்கு ஒரு ஹெக்டேருக்கு ரூ.20,000 நிவாரணத் தொகை வழங்கப்படும் என்று வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சென்னையில் அவர் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
டிட்வா புயல் சென்னைக்கு தென்கிழக்கே 40 கி.மீ. தொலைவில் நிலை கொண்டுள்ளது. அதிகாலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்துள்ளது.
இது நேராக வடக்கு திசை நோக்கி செல்லும் என்று சென்னை வானிலை ஆய்வு மையமும் தனியார் வானிலை ஆய்வாளர்களும் எச்சரிக்கை விடுத்து இருந்தனர்.
இதற்கு மாறாக, புயல் சின்னமானது சென்னை கடற்கரைக்கு அருகே ஒரே இடத்தில் நீண்ட நேரமாக நிலை கொண்டிருந்தது. புயலாக இல்லாமல் காற்றழுத்த தாழ்வு மண்டலாக உள்ளது.
இதனால் விட்டுவிட்டு மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் சராசரியாக 134 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக எண்ணூரில் 260 மி.மீ, பாரிமுனையில் 250 மி.மீ மழை பதிவாகியுள்ளது.
காற்றழுத்த தாழ்வு மண்டலம், காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுவிழந்து, மாமல்லபுரத்துக்கு அருகே தமிழக நிலபரப்பை அடையும். அப்போது மழை பெய்ய வாய்ப்புள்ளதால், தொடர் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
கனமழையால் தமிழ்நாடு முழுவதும் நீரில் மூழ்கி சேதமடைந்த விளை நிலத்துக்கு ஒரு ஹெக்டேருக்கு ரூ.20,000 இழப்பீடு வழங்கப்படும்.
மாநிலம் முழுவமும் 85,521.76 ஹெக்டேர் நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளது. டிட்வா புயலால் 4 பேர் பலியாகியுள்ளனர், 582 கால்நடைகள் பலியாகியிருக்கின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.