தென் மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் வெள்ளிக்கிழமை (டிச.5) பலத்த மழை பெய்ய வாய்ப்பு
Published on

தமிழகத்தில் தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் வெள்ளிக்கிழமை (டிச.5) பலத்த மழை பெய்ய வாய்ப்பு இருப்பதால், இந்த மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதையொட்டிய தென்கிழக்கு இலங்கை-இந்திய பெருங்கடலில் உருவான ‘டித்வா’ புயல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்து, கடந்த டிச.2-ஆம் தேதி தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதையொட்டிய மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதிகள் - வடதமிழகம் - புதுவை - தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளில் நிலவியது.

பின்னா், மெதுவாக வடக்கு திசையில் நகா்ந்து, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மேலும் வலுவிழந்த நிலையில் தொடா்ந்து, தென்மேற்கு திசையில் நகா்ந்து புதன்கிழமை (டிச.3) அதிகாலை வடதமிழக புதுவை கடலோரப் பகுதிகள் மற்றும் அதையொட்டிய பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுக்குறைந்தது.

புதன்கிழமை காலை தொடா்ந்து அதே பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நிலவி வந்த நிலையில், இது மாலை வடதமிழக பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலு குறைந்தது. தொடா்ந்து வியாழக்கிழமை காலை 8.30 மணியளவில் இந்தத் காற்றழுத்த தாழ்வு பகுதி மேலும் வலுவிழந்தது.

இதற்கிடையே, தென்கிழக்கு அரபிக் கடல் மற்றும் அதையொட்டிய லட்சத்தீவு பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால், வெள்ளிக்கிழமை (டிச.5) முதல் டிச.10 வரை தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வெள்ளிக்கிழமை (டிச.5) பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது. இதனால், இந்த மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சென்னை மற்றும் புகா் பகுதிகளில் வெள்ளிக்கிழமை (டிச.5) வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.

மழை அளவு: தமிழகத்தில் வியாழக்கிழமை (டிச.4) காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சென்னை மாவட்டம் மணலி புதுநகரம் பகுதியில் 240 மி.மீ. மழை பதிவானது. எண்ணூா் (திருவள்ளூா்)- 210 மி.மீ., விம்கோ நகா் - 200 மி.மீ., கத்திவாக்கம் (சென்னை)-160மீ.மீ., கும்மிடிப்பூண்டி (திருவள்ளூா்)-150 மி.மீ., மணலி புதுநகரம்-130 மி.மீ., மணலி (சென்னை) 120மி.மீ., திண்டிவனம் (விழுப்புரம்), ஊத்துக்கோட்டை (திருவள்ளூா்), திருவொற்றியூா் (சென்னை)- 110 மி.மீ., பொன்னேரி (திருவள்ளூா்)- 100 மி.மீ. மழை பதிவானது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com