திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற இந்து அமைப்பினர் முயற்சி - தள்ளுமுள்ளு! 144 தடை உத்தரவு

காவலர்கள் 4 பேர் காயம்...
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற இந்து அமைப்பினர் முயற்சி - தள்ளுமுள்ளு! 144 தடை உத்தரவு
Updated on
2 min read

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் அமைந்துள்ள தீபத் தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற இந்து அமைப்பினர் புதன்கிழமை மாலை முயற்சி மேற்கொண்டபோது ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் இரு காவலர்கள் உள்பட 4 பேர் காயமடைந்தார்.

திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா கடந்த 25} ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. முக்கிய நிகழ்வான கார்த்திகை தீபம் ஏற்றும் நிகழ்வு புதன்கிழமை மாலை நடைபெற்றது.

இதனிடையே, திருப்பரங்குன்றம் மலையில் உள்ள உச்சிப்பிள்ளையார் கோயில் மண்டபத்தில் கார்த்திகை தீபம் ஏற்றுவதற்குப் பதிலாக, மலை உச்சியில் அமைந்துள்ள தீபத் தூணில் ஏற்ற உத்தரவிடக் கோரி மதுரை எழுமலையைச் சேர்ந்த ராம. ரவிக்குமார் சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் வழக்குத் தொடுத்தார்.

இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன், வழக்கமான இடங்களுடன் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் அமைந்துள்ள தீபத் தூணிலும் கார்த்திகை மகா தீபம் ஏற்ற வேண்டும் என திங்கள்கிழமை உத்தரவிட்டார்.

இதற்கு எதிராக கோயில் நிர்வாகம் சார்பில் செவ்வாய்க்கிழமை மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இருப்பினும், இந்த மனு புதன்கிழமை விசாரணைக்கு வரவில்லை. இதன் காரணமாக, தனி நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவுப்படி, திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத் தூணில் புதன்கிழமை மாலை மகா தீபம் ஏற்றப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.

இதன்படி, அந்தத் தூணில் மகா தீபம் ஏற்றுவதற்கான முன்னேற்பாடுகள் புதன்கிழமை பிற்பகலில் நடைபெற்றன. தீபம் ஏற்றுவதற்குத் தேவையான மண் பானை, நெய், திரி, சூடம் போன்றவை மலை உச்சிக்கு கொண்டு செல்லப்பட்டன.

இதனிடையே, இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியன் தலைமையில் சுமார் 500}க்கும் அதிகமானோர் திருப்பரங்குன்றம் கோயில் பதினாறுகால் மண்டபம் பகுதியில் கூடி, கந்தசஷ்டி கவசம் பாராயணத்தில் ஈடுபட்டனர்.

மாலை 4 மணி அளவில் மலை உச்சிக்கு கொண்டு செல்லப்பட்ட தீபம் ஏற்றும் பொருள்கள் அனைத்தும் கீழே இறக்கப்பட்டன.

மாலை 6.05 மணி அளவில் மலை மீதுள்ள உச்சிப் பிள்ளையார் கோயில் மண்டபத்தில் மட்டும் கோயில் நிர்வாகம் சார்பில் மகா தீபம் ஏற்றப்பட்டது.

இதையடுத்து, இந்து அமைப்பினர் மலைப் பாதை அருகே திரண்டு, போலீஸôர் அமைத்திருந்த தடுப்புகளை கீழே தள்ளிவிட்டு, மலை மீது ஏற முயன்றனர். அப்போது, அவர்களுக்கும், போலீஸôருக்குமிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில், இரு காவலர்கள், பாஜக மாவட்டத் தலைவர் சிவலிங்கம், நிர்வாகி ராக்கப்பன் ஆகியோர் காயமடைந்தனர்.

இதையடுத்து, தென் மண்டல காவல் துறைத் தலைவர் பிரேம் ஆனந்த் சின்கா, மாநகரக் காவல் ஆணையர் ஜெ. லோகநாதன் ஆகியோர் திருப்பரங்குன்றத்துக்கு நேரில் வந்து, பாதுகாப்பை பலப்படுத்தினர். இந்து அமைப்பினர் மலைப் பாதை அருகிலேயே அமர்ந்து 2 மணி நேரத்துக்கும் மேலாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தடை உத்தரவு: இதனிடையே, பொதுமக்களின் பாதுகாப்பு, பொது அமைதியை கருத்தில் கொண்டு, திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்படுவதாக மாவட்ட ஆட்சியர் கே.ஜே. பிரவீன்குமார் தெரிவித்தார். இதையடுத்து, மாவட்ட நிர்வாகத்தின் தடை உத்தரவு ஒலிபெருக்கி மூலம் அறிவிக்கப்பட்டு, கூட்டத்தைக் கலைக்கும் பணியை போலீஸôர் மேற்கொண்டனர். போராட்டத்தில் ஈடுபட்டிருந்த இந்து அமைப்பினரை போலீஸôர் வலுக்கட்டாயமாக அகற்றி காவல் துறை வாகனங்களில் ஏற்றிச் சென்றனர். இதன் காரணமாக மீண்டும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. திருப்பரங்குன்றத்தில் புதன்கிழமை இரவு 9.30 மணியளவில் பதற்றம் தணிந்ததையடுத்து, போலீஸôர் தொடர்ந்து பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மலை உச்சியில் ஏற்றப்படாத தீபம்:

உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் உத்தரவுப்படி, ராம. ரவிக்குமார் உள்ளிட்டோர் திருப்பரங்குன்றம் மலை அடிவாரம் பகுதிக்கு புதன்கிழமை இரவு வந்தனர். பிறகு, சிஐஎஸ்எப் வீரர்கள் 67 பேர் பாதுகாப்புப் பணிக்கு வந்தனர். இதையடுத்து, ராம. ரவிக்குமார் உள்ளிட்டோர் நீதிமன்ற உத்தரவுப்படி சிஐஎஸ்எப் வீரர்கள் பாதுகாப்புடன் மலை உச்சிக்குச் சென்று தீபம் ஏற்ற தங்களை அனுமதிக்க வேண்டும் என போலீஸôரிடம் கோரினர்.

அப்போது, மாவட்ட நிர்வாகம் 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளதால், திருப்பரங்குன்றம் மலையில் ஏற அனுமதிக்க முடியாது என மாநகரக் காவல் ஆணையர் ஜெ. லோகநாதன் தெரிவித்தார். சுமார் 2 மணி நேரத்துக்கும் மேலாக இந்தப் பேச்சுவார்த்தை நீடித்தது. இருப்பினும், இதில் தீர்வு எட்டப்படவில்லை. இதையடுத்து, இரவு 9.15 மணி அளவில் இந்து அமைப்பினர் அங்கிருந்து புறப்பட்டனர்.

முன்னதாக, ராம. ரவிக்குமார், இந்து அமைப்பினர் மலைப் பாதை தொடங்குமிடத்தில் தீபம் ஏற்றி வழிபட்டனர்.

தமிழக அரசு முறையீடு:

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற உத்தரவிடக் கோரி வழக்குத் தொடுத்திருந்த ராம. ரவிக்குமார் உள்பட 10 பேர் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றலாம். அவர்களுக்கு சிஐஎஸ்எப் வீரர்கள் பாதுகாப்பு வழங்க வேண்டும் என உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் புதன்கிழமை மாலை உத்தரவிட்டிருந்தார்.

இந்த உத்தரவுக்கு தடை விதிக்கக் கோரி, உயர்நீதிமன்ற மதுரை அமர்வு நிர்வாக நீதிபதி ஜெயச்சந்திரன் முன் தமிழக அரசின் கூடுதல் தலைமை வழக்குரைஞர் வீரா கதிரவன் முன்னிலையாகி முறையிட்டார். இதை ஏற்றுக் கொண்ட நிர்வாக நீதிபதி ஜெயச்சந்திரன், இந்த மேல்முறையீட்டு மனு வியாழக்கிழமை (டிச. 4) முற்பகலில் முதல் வழக்காக விசாரிக்கப்படும் எனத் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com