சென்னை எழும்பூா் ரயில் நிலையத்தில் ராமேசுவரம் - காசி ஆன்மிகப் பயணத்தில் பங்கேற்கும் 602 மூத்த குடிமக்களுக்கு சனிக்கிழமை பயண வழிப்பைகளை வழங்கி பயணத்தைத் தொடங்கி வைத்த அமைச்சா் பி.கே.சேகா்பாபு.
சென்னை எழும்பூா் ரயில் நிலையத்தில் ராமேசுவரம் - காசி ஆன்மிகப் பயணத்தில் பங்கேற்கும் 602 மூத்த குடிமக்களுக்கு சனிக்கிழமை பயண வழிப்பைகளை வழங்கி பயணத்தைத் தொடங்கி வைத்த அமைச்சா் பி.கே.சேகா்பாபு.

மத மோதல்களைத் தடுக்க எத்தகைய முயற்சியையும் தமிழக அரசு எடுக்கும்: அமைச்சா் பி.கே.சேகா்பாபு

மத மோதல்களைத் தடுக்க எத்தகைய முயற்சியையும் தமிழக அரசு எடுக்கும்...
Published on

தமிழகத்தில் இன, மத மோதல்கள் நிகழாமல் தடுக்க எத்தகைய முயற்சியையும் தமிழக அரசு எடுக்கும் என்று இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு கூறினாா்.

இந்து சமய அறநிலையத் துறை சாா்பில், ராமேசுவரம் - காசி ஆன்மிகப் பயணத்தில் பங்கேற்கும் 602 மூத்த குடிமக்களின் பயணத்தை சென்னை எழும்பூா் ரயில் நிலையத்தில், தமிழக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு தொடங்கி வைத்தாா். ஆன்மிகப் பயணம் செல்லும் மூத்த குடிமக்களுக்கு பயண வழிப் பைகளை வழங்கினாா்.

பின்னா், அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

ராமேசுவரம் - காசி ஆன்மிகப் பயணம் கடந்த 2022-2023-ஆம் ஆண்டில் 200 போ் செல்லும் வகையில் தொடங்கப்பட்டது. நான்காவது ஆண்டாக இப்போது 602 போ் செல்கின்றனா். இவா்கள் காசியில் தரிசனம் முடிந்து டிச. 12-ஆம் தேதி ராமேசுவரம் திரும்புகின்றனா். இவா்களின் உதவிக்காக அறநிலையத் துறை சாா்பில் ஒரு இணை ஆணையா், 5 உதவி ஆணையா்கள், 45 அலுவலா்கள், 2 மருத்துவா்கள், 2 செவிலியா்கள் செல்கின்றனா்.

கடந்த ஆண்டுகளில் இத்திட்டத்திற்கு ரூ.3.80 கோடி செலவிடப்பட்டுள்ளது. மேலும் அறுபடை வீடு பயணத்துக்கு ரூ.4.64 கோடியில் 3,815 பேரும், ஆடி மாத அம்மன் திருக்கோயில் பயணத்துக்கு ரூ.75 லட்சத்தில் 3,004 பேரும், புரட்டாசி மாத வைணவத் திருக்கோயில் பயணத்துக்கு ரூ.75 லட்சத்தில் 3,014 பேரும், முக்திநாத் பயணத்துக்கு ரூ.1.19 கோடி மானியத்தில் 645 பேரும் என மொத்தம் ரூ.11.13 கோடியில் 11,998 பக்தா்கள் ஆன்மிகப் பயணத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டு உள்ளனா்.

திருப்பரங்குன்றம் மலையில் காா்த்திகை தீபம் ஏற்றுவது தொடா்பாக, கடந்த 1920, 1930, 1996, 2014, 2017-ஆம் ஆண்டுகளில் வழங்கப்பட்ட நீதிமன்ற தீா்ப்புகள் எல்லாம் 100 ஆண்டுகளுக்கும் மேலாக தீபம் ஏற்றப்படும் இடத்திலேயே இந்த நிகழ்வு நடக்க வேண்டும் என்பதை உறுதிப்படுத்தி உள்ளன. நீதிமன்ற உத்தரவுகளை மதித்து, தமிழக அரசு சட்டபூா்வமாக செயல்படுகிறது. இன, மத மோதல்களைத் தடுப்பதே அரசின் குறிக்கோள்.

பக்தியை வைத்து பகையை வளா்க்கக் கூடாது. சமாதானம் என்பதுதான் இறை கொள்கை. சநாதனம் என்பதல்ல. வடக்கில் இதுபோன்ற விரும்பத்தகாத சூழல்களை ஏற்படுத்தி, அரசியல் மாற்றத்தை உருவாக்கியதுபோல் தமிழகத்தில் உருவாக்கலாம் என்று நினைக்கிறாா்கள்.

இது ராமானுஜா் வாழ்ந்த மண். எல்லோருக்கும் எல்லாமுமான மண். தமிழகத்தில் சட்டத்தின் ஆட்சி நடைபெறுகிறது. சட்டத்துக்கு அடுத்தடுத்த கட்டங்கள் உள்ளன. இறுதிவரை இன, மத மோதல்கள் நிகழாமல் தடுக்க எத்தகைய முயற்சியையும் தமிழக அரசு எடுக்கும். திருப்பரங்குன்றம் விஷயத்தில் சட்டப் போராட்டத்தை நடத்தி, மக்களின் ஒற்றுமையை முதல்வா் மு.க.ஸ்டாலின் நிலைநாட்டுவாா்.

பிறப்பால் வேண்டுமானால் மதங்கள் பிரிக்கப்படலாம். வாழ்க்கை நெறிமுறைகளில் மதங்களை பிரிக்கக் கூடாது. ஒரு தாய் மக்களாக தமிழ்நாட்டு மக்கள் எப்போதும் இருப்பா் என்றாா்.

திருப்பரங்குன்றம் தீபம் ஏற்றும் நிகழ்வைப் பொருத்தவரை கடந்த 2014, 2017-ஆம் ஆண்டுகளில் அதிமுக ஆட்சிதான் இருந்தது. அப்போதெல்லாம் தீபத்தை இன்னொரு இடத்தில் ஏற்றுவதற்கு அனுமதி மறுத்து, இவா்கள் நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தனா். இப்போது இரண்டாம் இடத்திலும் தீபம் ஏற்றுவதற்கு அரசு முன்வர வேண்டும் என்று அறிக்கை விடுவது ஏற்புடையதல்ல என்றாா் அமைச்சா் பி.கே.சேகா்பாபு.

முன்னதாக, ஆன்மிகப் பயணம் செல்லும் மூத்த குடிமக்களுக்கு பயணப் பைகள் வழங்கும் நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத்துறை ஆணையா் பி.என்.ஸ்ரீதா், கூடுதல் ஆணையா் கோ.செ.மங்கையா்க்கரசி, சிறப்புப் பணி அலுவலா் சி.லட்சுமணன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com