

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் நட்பின் அடிப்படையில்தான் பாஜகவுக்கு ஆதரவளித்தோம் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.
மதுரையில் அவர் அளித்த பேட்டியில், "மாநகராட்சியின் குடிநீர் தேவைக்காக முல்லைப்பெரியாறில் இருந்து செயல்படுத்தப்படும் அம்ரூத் முழுமையடையாமலே முதல்வர் ஸ்டாலின் நாளை திறந்து வைக்கிறார். எதற்காக இவ்வளவு அவசரம்? இரண்டு மாதங்களாக மேயர் இல்லாமல் மாநகராட்சி பணிகள் முடங்கியுள்ளன. செங்கோட்டையன் போனது அதிமுக எனும் ஆல மரத்தில் ஒரு இலை உதிர்வது போலதான். பழுத்த இலை ஒன்று கீழே விழுவதால் ஆலமரம் சாய்ந்து விட்டது என அர்த்தமில்லை.
செங்கோட்டையனுக்கு மக்கள் ஓட்டு போடவில்லை, இரட்டை இலைக்காக, அதிமுகவுக்காகதான் மக்கள் ஓட்டு போட்டார்கள். அதிமுகவை செங்கோட்டையன் வெளியேறி போனது நியாயமா? எம்.ஜி.ஆர் கட்சியில்தான் கடைசி வரை இருப்பேன் என சொல்பவர்தானே உண்மையாக ரோஷம் உள்ளவர். தமிழக அரசியலில் புதிதாக யார் வந்தாலும் இப்போது மக்கள் மத்தியில் ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி ஆகிய இருவர் மட்டுமே உள்ளனர். காக்கைக்கு தன் குஞ்சு பொன்குஞ்சு என்பது போலதான் தானும் முதல்வர் ஆவேன் என விஜய் பேசி கொண்டிருக்கிறார்.
மதுரையில் இந்து - இஸ்லாமியர்கள் அண்ணன் தம்பிகளாக வாழ்கிறோம். திமுக பிளவை ஏற்படுத்த முயற்சிக்கிறது. திருப்பரங்குன்றம் விவகாரத்தில் கைது செய்யப்பட்ட பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனை அதிமுக சார்பில் எம்.எல்.ஏ ராஜன் செல்லப்பா சென்று சந்தித்தது மனிதாபிமான அடிப்படையில்தான். நட்பின் அடிப்படையில்தான் திருப்பரங்குன்றம் விவகாரத்தில் பாஜகவுக்கு ஆதரவு தெரிவித்தோம். இதில் அரசியல் இல்லை. நாங்கள் என்ன பாஜகவுடன் சேர்ந்து திருப்பரங்குன்றம் விவகாரத்துக்காக ஆர்ப்பாட்டம், போராட்டம் செய்தோமா? இல்லையே.
கூட்டணி என்பது தோலில் போடப்பட்ட துண்டு. கூட்டணியில் இருந்தாலும் கொள்கை தனித்தனியாக இருக்கும். தேர்தலில் பார்ட்னராக இருப்போம். எந்த நிலைமை வந்தாலும் நான் அதிமுக வேட்டியை மாற்ற மாட்டேன்" என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.