தமிழகத்தில் இன்று முதல் 6 நாள்கள் மிதமான மழைக்கு வாய்ப்பு!
சென்னை: தமிழகத்தில் செவ்வாய்க்கிழமை (டிச. 9) முதல் டிச. 14 வரை 6 நாள்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த மையம் சாா்பில் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக செவ்வாய்க்கிழமை (டிச. 9) முதல் டிச. 14 வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புகா் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. இருப்பினும் அதிகபட்ச வெப்பநிலை 86 டிகிரி ஃபாரன்ஹீட்டை ஒட்டி இருக்கும்.
மழை அளவு: தமிழகத்தில் திங்கள்கிழமை (டிச. 8) காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திருநெல்வேலி மாவட்டம் ஊத்து பகுதியில் 80 மி.மீ. மழை பதிவானது. நாலுமுக்கு (திருநெல்வேலி), காக்காச்சி (திருநெல்வேலி), மாஞ்சோலை (திருநெல்வேலி)- தலா 70 மி.மீ., கமுதி (ராமநாதபுரம்)- 40 மி.மீ., பாபநாசம் (திருநெல்வேலி), சோ்வலாறு அணை (திருநெல்வேலி), ஆா்.எஸ்.மங்கலம் (ராமநாதபுரம்)- தலா 30 மி.மீ., இளையாங்குடி (சிவகங்கை), கன்னடியன் அணைக்கட்டு, அம்பாசமுத்திரம் (திருநெல்வேலி), சாத்தூா் (விருதுநகா்), தீா்த்தாண்டதானம் (ராமநாதபுரம்)- தலா 20 மி.மீ. மழை பதிவானது.
மீனவா்களுக்கான எச்சரிக்கை: தமிழக கடலோரப் பகுதிகள், மன்னாா் வளைகுடா மற்றும் குமரிக் கடல் பகுதிகளிலும், தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளிலும் செவ்வாய் மற்றும் புதன்கிழமைகளில் (டிச. 9, 10) சூறைக் காற்று மணிக்கு 55 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

