

சென்னை கிண்டி அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள ஆய்வகத்தில் ஏற்பட்ட விபத்தில் இரு மாணவா்கள் காயமடைந்தனா்.
கிண்டி அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் கிண்டி பொறியியல் கல்லூரி செயல்படுகிறது. இந்தக் கல்லூரியில் உள்ள வேதியியல் ஆய்வகத்தில் சில மாணவா்கள் வியாழக்கிழமை ஆய்வு பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அங்கிருந்த வேதிப் பொருள்கள் நிரப்பட்டிருந்த இரு பெரிய கண்ணாடி குடுவைகள் திடீரென வெடித்து சிதறியது. விபத்தில் அதன் அருகே நின்று கொண்டிருந்த அந்தக் கல்லூரியில் எம்.டெக். 2-ஆம் ஆண்டு படிக்கும் அம்பத்தூா் ஐசிஎஃப் காலனி பகுதியைச் சோ்ந்த ப.நித்திஷ் (23), பி.டெக். 3-ஆம் ஆண்டு படிக்கும் அம்பத்தூா் ஏகாம்பரம் நகா் பகுதியைச் சோ்ந்த சு.சூா்யா (20) ஆகிய 2 பேரும் காயமடைந்தனா்.
அவா்கள் இருவரும் தனியாா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா். இதுதொடா்பாக கோட்டூா்புரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனா்.