

குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு, டிசம்பர் 16 முதல் 22 வரை கர்நாடகம் தமிழகம், தெலங்கானா ஆகிய மாநிலங்களில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளார்.
இது தொடர்பாக குடியரசுத் தலைவர் மாளிகை செயலகம் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: டிச.16-ஆம் தேதி கர்நாடக மாநிலம், மாண்டியா மாவட்டம், மாலவல்லியில் நடைபெறும் ஆதி ஜகத்குரு ஸ்ரீ சிவராத்திரீஸ்வர சிவயோகி மகாசுவாமிகளின் 1066-ஆவது ஜெயந்தி விழாவை குடியரசுத் தலைவர் தொடங்கி வைக்கிறார்.
டிச.17-ஆம் தேதி, தமிழகத்தின் வேலூரில் உள்ள பொற்கோயிலில் குடியரசுத் தலைவர் தரிசனம் செய்து பூஜை செய்கிறார். இதைத்தொடர்ந்து, தெலங்கானாவின் செகந்தராபாதில் உள்ள போலாவரத்தில் உள்ள குடியரசுத் தலைவர் ஓய்வு மாளிகைக்குச் செல்கிறார்.
டிச.19-ஆம் தேதி, தெலங்கானா பணியாளர் தேர்வாணையத்தால் ஹைதராபாதில் ஏற்பாடு செய்யப்படும் தேர்வாணைய தலைவர்களுக்கான தேசிய மாநாட்டை குடியரசுத் தலைவர் தொடங்கி வைக்கிறார்.
டிச.20-ஆம் தேதி, பிரம்மா குமாரிகள் சாந்தி சரோவர் அமைப்பின் 21-ஆம் ஆண்டு விழாவைக் குறிக்கும் வகையில், ஹைதராபாதில் அந்த அமைப்பால் ஏற்பாடு செய்யப்படும் பாரதத்தின் காலத்தால் அழியாத ஞானம் அமைதி மற்றும் முன்னேற்றத்திற்கான பாதைகள் என்ற பெயரில் நடைபெறும் மாநாட்டில் குடியரசுத் தலைவர் தலைமை உரையாற்றுகிறார் என்று செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.