

கூட்டணி தொடர்பாக முடிவெடுக்க அமமுகவிற்கு பிப்ரவரி மாதம் வரை அவகாசம் உள்ளது என்று அமமுக பொதுச்செயலர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
தஞ்சாவூரில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அவர், வரும் பிப்ரவரி 23ஆம் தேதி எங்கள் கூட்டணி குறித்த விவரத்தை உறுதியாக தெரிவிப்பேன். அமமுக இடம் பெறும் கூட்டணிதான் இந்த தேர்தலில் நிச்சயமாக வெற்றி பெறும். இதை அதீத நம்பிக்கையில் கூறவில்லை. தற்போதைய அரசியல் நிலவரத்தில் நான்கு முனைப் போட்டி நடைபெறுகிறது. இதை முழுமையாக தெரிந்தே தெரிவிக்கிறேன்.
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து பிரிந்து சென்ற கட்சிகள் மீண்டும் வந்து இணையும் வாய்ப்புள்ளது என நயினார் நாகேந்திரன் தெரிவித்திருப்பது அவருடைய கருத்து. நான் எனது கட்சித் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளின் விருப்பத்தை வைத்தே செயல்படுவேன்.
அமமுக நிலைப்பாடு என்ன என்பதை இன்னும் ஒன்றரை மாதத்தில் புரிந்து கொள்வீர்கள். கேரள உள்ளாட்சித் தேர்தலில் ஆளும் கம்யூ., கட்சியை எதிர்த்து காங்கிரஸ் அதிக இடத்தில் வெற்றி பெற்றுள்ளது. திருவனந்தபுரத்தில் பாஜக வெற்றி பெற்றுள்ளது. உள்ளாட்சித் தேர்தல் என்பது வேறு. சட்டமன்ற, பாராளுமன்ற தேர்தல்கள் என்பது வேறு. அதனால் உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் சட்டமன்றத் தேர்தலில் பாதிக்காது என்றுதான் கூறுவார்கள்.
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் நீதி அரசரை மாற்ற வேண்டும் என்று கூறுவது ஏற்புடையது அல்ல. அரசியலை கடவுள் பெயரால் மதம் ஜாதியின் பெயரால் மக்களை பிரிக்கும் செயலில் யாரும் ஈடுபடக் கூடாது என்பதுதான் எங்களின் நோக்கம். சகோதரத்துவத்துடன் அண்ணன், தம்பி தங்கை என ஒரே குடும்பமாக இருக்கும் தமிழக மக்கள் மத்தியில் பிரிவினையை ஏற்படுத்தக் கூடாது.
எஸ்ஐஆர் தேவை இல்லை என்று கூறுவது தவறு. பிகாரில் நடந்தது குறித்து குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர். இறந்தவர்கள் பெயர்கள் நீக்கம், விடுபட்டு உள்ளவர்கள் என சரியான முறையில் வாக்காளர் பட்டியல் தயார் செய்ய வேண்டும் என்பதுதான் எங்களின் விருப்பம். சட்டமன்றத் தேர்தலின் போது தேசிய தலைவர்கள் தமிழகத்திற்கு வருவது புதிது இல்லை. இது வழக்கமான ஒன்றுதான்.
அம்மாவின் தொண்டர்கள் ஒரே அணியில் இணைய வேண்டும் என்றுதான் கூறினேன். அவர்கள் ஒரே கட்சியில் இணைய வேண்டும் எனக் கூறவில்லை. ஒரே அணியில் இணைந்தால் தான் இந்த சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற முடியும். இந்த சட்டமன்றத் தேர்தலில் சரியான பதிலை, முடிவை மக்கள் தெரிவிப்பார்கள்.
நாங்கள் இடம்பெறும் கூட்டணியை தவிர்த்து வேறு எந்த கூட்டணியும் வெற்றி பெற முடியாது. அமமுக வெற்றிக் கூட்டணியில் இணையும். எங்கள் கூட்டணி குறித்து வரும் பிப்ரவரி மாதம் உறுதியாக தெரிவித்து விடுவோம். எட்டு ஆண்டுகளாக பல்வேறு பிரச்னைகளுக்கு மத்தியிலும் என்னுடன் தொடர்ந்து வரும் தொண்டர்கள் நிர்வாகிகள் முடிவே எனது முடிவு. இவ்வாறு கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.