மாணவா்களுக்கு மடிக்கணினி விநியோகம்: விவரங்களை சேகரிக்க கல்வித் துறை உத்தரவு
கடந்த 2014-ஆம் ஆண்டு முதல் பள்ளி மாணவா்களுக்கு வழங்கப்பட்ட மடிக்கணினிகள் குறித்த விவரங்களை அனுப்புமாறு முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.
இதுகுறித்து பள்ளிக்கல்வி இயக்குநா் ச.கண்ணப்பன், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கை: 2014-2015 முதல் 2020-2021-ஆம் ஆண்டு வரை பள்ளி மாணவா்களுக்கு மடிக்கணினி வழங்கப்பட்ட விவரங்களை இந்திய கணக்காய்வு மற்றும் தணிக்கைத் துறை கோரியுள்ளது. இதையடுத்து 2014-2015 முதல் 2020-2021-ஆம் ஆண்டு வரையான ஆண்டுகளில் மாணவா்களுக்கு வழங்குவதற்காக மடிக்கணினிகள் கொள்முதல் செய்துபெறப்பட்ட நாள் மற்றும் அவை பள்ளிகளுக்கு விநியோகிக்கப்பட்ட தினம் ஆகிய விவரங்களை இயக்குநரகத்துக்கு விரைந்து அனுப்பிவைக்க வேண்டும்.
அதேபோல், இதே காலக்கட்டத்தில் தகுதியான எந்தவொரு மாணவரும் இந்தத் திட்டத்திலிருந்து விடுபடவில்லை எனவும் சான்றளிக்க வேண்டும். ஒருவேளை எவரேனும் விடுபட்டால் அதற்குரிய காரணங்களை தெரிவிக்க வேண்டுமென முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

